ரூ.15 ஆயிரம் சேமித்து வைத்து புத்தகம்
திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு முதன் முறையாக புத்தக திருவிழா நடைபெற்றது. அப்போது குழந்தைகளிடையே புத்தகம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துகின்ற வகையில் கடந்த ஆண்டு நடைபெற்ற புத்தக திருவிழாவில் புத்தகங்களை வாங்குவதற்கு தேவையான தொகையை சேமிப்பதற்காக எங்கள் உண்டியல் எங்க புத்தகம் என்ற திட்டத்தை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் 100 குழந்தைகளுக்கு உண்டியல்களை வழங்கி தொடங்கி வைத்தார்.
இந் நிலையில் இந்த ஆண்டு திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் நடைபெற்று வரும் முதலாவது புத்தகத் திருவிழாவில் திருவள்ளூர் மணவாளநகர் பகுதியைச் சேர்ந்த முருகன் காமாட்சி தம்பதியினரின் மகன்களான யுகன் (8 வயது) கோகுல மாயோன் (5வயது) ஆகிய இருவரிடம் கடந்த ஆண்டு கொடுத்த உண்டியலில் சேமித்து வைத்திருந்த ரூ.15 ஆயிரத்தை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் இடம் வழங்கி புத்தகங்களை வாங்கினர்.இதனையடுத்து குழந்தைகளின் ஆர்வத்தை வெகுவாகப் பாராட்டினார்.
இந்த நிகழ்ச்சியின் போது ஆவடி மாநகராட்சி ஆணையர் தரபகராஜ், சிறப்பு வட்டாட்சியர் எம்.ஆர்.தமிழ்செல்வன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் கோ.மலர்விழி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வி.எபிநேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.