யாருக்கெல்லாம் ரூ.1000 மகளிர் உரிமைத்தொகை கிடைக்கும்? முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
யாருக்கெல்லாம் ரூ.1000 மகளிர் உரிமைத்தொகை கிடைக்கும்?
முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
“நடைபாதையில் வணிகம் செய்திடும் மகளிர், மீனவ மகளிர், கட்டுமானத் தொழிலில் பணிபுரியும் மகளிர், சிறிய கடைகள், வணிகம், சிறிய நிறுவனங்களில் சொற்ப ஊதியத்தில் பணிபுரியும் மகளிர், ஒரே நாளில் ஒன்றுக்கும் மேற்பட்ட இல்லங்களில் பணிபுரியும் மகளிர், என பல்வேறு வகைகளில் தங்களது விலை மதிப்பில்லா உழைப்பை வழங்கி வரும் பெண்கள் ‘மகளிர் உரிமைத் தொகை’ திட்டத்தால் பயன்பெறுவர்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இத்திட்டம் குறித்து சட்டப் பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியது:
தேர்தல் அறிக்கையில் குறிப்பிடாத பல உன்னதமான திட்டங்களையும் இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த ஆண்டின் மகத்தான திட்டமான ‘மகளிர் உரிமைத் தொகை’ திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. பெண்களுக்கான சமூக பொருளாதாரத்தை மீட்க எத்தனையோ தலைவர்கள் வந்தாலும் பெரியாரின் சுயமரியாதை இயக்கமே பெண் விடுதலைக்கு பாதை அமைத்தது. கிராமப் பொருளாதாரத்தை சுமப்பதாக பெண்கள் இருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது.
உண்மையில் ஒவ்வொரு நாளும் தன் திறமைகேற்று பணிபுரிந்து பொருள் ஈட்டும் ஒவ்வொரு ஆணுக்கும் பின்னும், ஒரு தாய், சகோதரி,என அந்த ஆணின் வீட்டு பொண்களின் பல மணிநேர உழைப்பு மறைந்திருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஒரு ஆணுடைய வெற்றிக்காகவும், குழந்தைகளின் கல்வி, சமூகத்திற்காகவும் எத்தனை மணி நேரங்கள் அவர்கள் உழைத்திருப்பார்கள்..? இப்படி கணக்கில் கொள்ளப்படாத பெண்களின் உழைப்பை முறையாக அங்கீகரிக்கத்தான் ‘மகளிர் உரிமைத் தொகை’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டி ருக்கிறது.
ஆண்கள் அங்கீகரித்தால் பெண்களுக்கான சமூக உரிமை வழங்கிடும் நிலை உருவாகும் என இந்த அரசு நம்புகிறது. அதனால்தான் இத்திட்த்திற்கு மகளிர் உதவித்தொகை என்று இல்லாமல், மகளிர் உரிமைத் தொகை என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த ‘மகளிர் உரிமைத் தொகை’ வழங்கும் திட்டத்திற்காக இந்த நிதிநிலை அறிக்கையில் 7000 கோடி ரூபாய் ஒதுக்ப்பட்டிருப்பதை யொட்டி, எவ்வளவு பேர் பயனடைவார்கள் என்று பலர் மணக்கணக்கு போட்டு வருகின்றனர். இந்த திட்டம் யாருக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று பொதுமக்களுக்கே தெரிகிறது.
இந்த ‘மகளிர் உரிமைத் தொகை’ திட்டம் இரண்டு நோக்கங்களைக் கொண்டது. பிரதிபலன் பாராமல், வாழ்நாளெல்லாம் ஓய்வின்றி உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் உழைப்புக்கு கொடுக்கும் அங்கீகாரம் முதன்மையானது. அடுத்து, ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை என்பது பெண்களின் வாழ்வாதாரத்துக்கு உறுதுணையாக இருந்து, வறுமையை ஒழித்து வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி சுயமரியாதையோடு சமூகத்தில் அவர்கள் வாழ்வதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதாகும். மகளிரின் சமூக பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக அறிவிக்கப்பட்டிருக்க் கூடிய மாதம் ரூ.1000 என்பது, குடும்பத்தலைவிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். நடைபாதையில் வணிகம் செய்திடும் மகளிர், மீனவ மகளிர், கட்டுமானத் தொழிலில் பணிபுரியும் மகளிர், சிறிய கடைகள், வணிகம், சிறிய நிறுவனங்களில் சொற்ப ஊதியத்தில் பணிபுரியும் மகளிர், ஒரே நாளில் ஒன்றுக்கும் மேற்பட்ட இல்லங்களில் பணிபுரியும் மகளிர், என பல்வேறு வகைகளில் தங்களது விலை மதிப்பில்லா உழைப்பை வழங்கி வரும் மகளிர் இத்திட்டத்தால் பயன்பெறுவார்கள்.
இந்த திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும். இந்த மகத்தான மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் மூலம் ஏறத்தாழ 1 கோடி குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும்” என்று அவர் கூறினார்.