உலக காசநோய் விழிப்புணர்வு தின கொண்டாட்ட

Loading

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மேற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக உலக காசநோய் விழிப்புணர்வு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. காளையார்கோவில் வட்டார கல்வி அலுவலர் சகாய செல்வன் தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர் ஜேம்ஸ் முன்னிலை வகித்தார். பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜஸ்டின் திரவியம் வரவேற்புரை ஆற்றினார். சிவகங்கை மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் ஆரோக்கியசாமி காசநோய் குறித்து சிறப்புரையாற்றினார். நாம் காச நோயை முடிவுக்கு கொண்டு வரலாம். ஒரு காலத்தில் உயிர்கொல்லி நோயாக இருந்தது. இன்றும் கூட அச்சுறுத்தக் கூடிய நோய் தான். ஏழை நாடுகளில் இந்த நோயின் தாக்கம் மிகவும் அதிகம். குறிப்பாக இந்தியாவில் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மிக அதிகம். டி.பி.எனப்படும் காசநோய் தான் மிக சுலபமாக காற்றின் மூலம் பரவும் ஆபத்து கொண்ட நோய். பாதிக்கப்பட்டவர்களை உருக்குலைத்து விடக் கூடியது. இந்தியாவில் அதிக தாக்கத்தை ஏற்படுத்த மக்கள் தொகை தான் மிகப்பெரிய காரணம். சுகாதாரமின்மை, காற்றோட்ட வசதி இல்லாதது, மது வகைகள், சிகரெட் பிடிப்பது போன்ற பல்வேறு காரணிகள் இந்த நோய் ஏற்பட காரணமாக இருக்கின்றன. டியூபர் செல் பேசிலஸ் அல்லது டியூபர் குளோசிஸ் என்பதன் சுருக்கம் தான் டிபி. தொடர்ந்து இருமல், சளியுடன் ரத்தம் வருவது, காய்ச்சல், இரவில் குளிர் நடுக்கம், நெஞ்சில் வலி, இரவில் அதிகம் வியர்ப்பது ஆகியவை இந்த நோய்க்கான அறிகுறிகள். சளியை எடுத்து பரிசோதிப்பதன் மூலம் உறுதிப்படுத்தலாம். கிளியர் மைக்ரோஸ்கோபி மூலம் சளியை பார்க்கும் போது கிருமிகள் அதிகம் இருந்தால் காச நோய் என்ற முடிவுக்கு வரலாம். ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்துவிட்டால் ஆறு மாதங்களில் மருந்து மாத்திரைகள் சாப்பிட்டு நோயை குணப்படுத்திவிடலாம். மாணவ மாணவிகள் காசநோய் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். சிலந்தகுடி பொறுப்பு தலைமை ஆசிரியர் முனைவர் ஜெயபிரகாஷ், ஆசிரியை சாந்தி வாழ்த்துரை வழங்கினார்கள். ஆசிரியை புதுமை தெரஸ் நன்றி கூறினார்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *