மீண்டும் மீண்டும் யானைகள் தொல்லை  மீள முடியாத விவசாயிகளின் விழி நீர் கதை 

Loading

பேரணாம்பட்டு அடுத்த சேராங்கல் மலையடி கிராமத்தைச் சேர்ந்த யானை துரைசாமி மகன்கள் மோகன் பாபு ,சுரேஷ்,ஆனந்தபாபுமற்றும் கொத்தூர் செந்தில் என்பவரது நிலங்கள் ஆந்திர வனப்பகுதியின் எல்லை ஓரம் உள்ளது .இந்த கிராமத்திற்குள் யானைகள் அடிக்கடி வருவதாலும் பெரும் பயிர் சேதங்கள் ஏற்படுவதாலும் சுமார் 8 ஆண்டுகளுக்கு முன்பு யானைகள் வந்தால் ஒலி எழுப்பும் அலாரம் கருவியை ஆனந்தபாபு தனது நிலத்தில் பொருத்தினார். இக்கருவி 12 வோல்ட்டு மின்திறன் கொண்டது.  குழந்தை கூட இக்கருவியின் மின் கம்பியை கையில் பிடித்தாலும் ஆபத்து இல்லை .இக் கருவி பொருத்திய பின்பே கிராம மக்களுக்கு நிம்மதி கிடைத்தது .உயிர் பயமும் அகன்றது. யானை வரும் போது மோகன் பாபு பட்டா நிலத்தில் ஆறடி உயரத்தில் உள்ள அலாரம் கம்பி இணைப்பில்  யானை உடல் பட்டவுடன் அலாரம் கருவி ஒலிக்க துவங்கிவிடும். எந்த பகுதியில் யானை வந் ள்ளது என்பதையும் அறிய முடியும். இதனால் இந்த அலாரம் ஒலி கேட்டதும் கிராம மக்கள் மோகன் பாபு வீட்டருகே வந்து  பட்டாசுகளை கொளுத்தி போட்டு யானைகளை விரட்டி வந்தார்கள். சுருங்கச் சொன்னால் சுமார் ரூ1500 மதிப்பில் பேட்டரியால் இயங்கும் அலாரம் கருவி கிராம மக்களின் உயிருக்கே பாதுகாப்பாய் இருந்தது. யானைகள் நடமாடத்தின் போது இங்கு வரும் வனத்துறையினர் மோகன் பாபு நிலத்திலேயே  தங்கி வந்துள்ளார்கள். இந்த கருவி குறித்து சில ஆண்டுகளுக்கு முன்பு வனச்சரகர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் கூட்டத்தில் செயல் விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல பகுதிகளிலிந்து யானையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் இந்த கருவி இயங்கும் முறையை பார்த்து சென்றுள்ளார்கள். மேலும் வனத்துறையினரும் இதுகுறித்து பாராட்டி சென்றுள்ளனர். மோகன் பாபு தந்தை யானைக்  கூட்டத்தினால் பயிர்கள் அழிக்கப்பட்டு கடனாளி ஆனார். ஒருநாள் யானை ஒன்று இவரை மிதித்தே கொன்றது. இந்த வேதனையும் கிராம மக்களின் தேவையும் தான் மோகன் பாபு இந்த கருவியை அமைப்பது பற்றி யோசிக்க வைத்தது .உயிருக்கும் பயம் இல்லாமல் மற்றவர்களுக்கும் ஒலி எழுப்பி எச்சரிக்கை விடும் இந்த அலாரத்தை வடிவமைத்தார். இக்கருவி குறித்து பத்திரிகை ஊடகங்களிலும் செயல் விளக்கம் வந்துள்ளன. இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம்
 இந்த அலாரத்தை எடுத்து வந்து வனச்சரக அலுவலகத்தில் வனத்துறை உயர் அதிகாரிகள் முன்னிலையில் செயல் விளக்கம் அளித்திட வருமாறு மோகன் பாபுவை வனத்துறையினர் அழைத்து வந்து அவர் மீது வழக்கு பதிவிட்டு கைது செய்தனர். கைதுக்கு காரணம் கேட்டபோது வனத்துறையினர் கருவியின் சப்தத்தால் வனத்திலுள்ள  உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படலாம் என காரணம் கூறிவிட்டனர். இதனை அடுத்து பறிமுதல் செய்த கருவி கோர்ட்டில் உள்ள நிலையில் கடந்த 1ம்தேதி இரவு மீண்டும் இரண்டு யானைகளால் பயிர்கள் நாசமாவது துவங்கிவிட்டது.முதலில் விவசாயி செந்தில் நிலத்தில் 14 தென்னை மரங்களை முறித்து அழித்தன.4 மாமரங்களை சேதப்படுத்தி 6 முள்கம்பங்களையும் உடைத்து விட்டன. மோகன் பாபு நிலத்தில் இரு மாஞ்செடிகளை அழித்தும் எலுமிச்சை தோட்டத்தில் செடிகளை முறித்து போட்டும் பாசனத்துக்கு செல்லும் பைப்புகளை மிதித்தும் அழித்துவிட்டன .மேலும் சுரேஷ் நிலத்தில் 10 சென்ட் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த தீவனப் பயிரை மிதித்து அழித்துவிட்டன. ஆனந்த பாபு  மாந்தோப்பில் புகுந்து அங்கிருந்த இரு முள் கம்பங்களை சேதப்படுத்தி விட்டன அதிகாலையில்  வீட்டிலிருந்து வெளியே வந்த மோகன் பாபு வாசலில் யானை நிற்பதை கண்டதும் கூச்சலிட்டு பானங்கள் கொளுத்தி வெடிக்க வைத்து அந்த சப்தத்தில் யானைகள் இரண்டும் காட்டு பகுதிக்குள் சென்று விட்டன. உடனடியாக இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்து அவர்கள் சுமார் 9மணி நேரம் கழித்து சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு சென்றனர். இது குறித்து செந்தில் கூறியதாவது மோகன் பாபு கைதுக்கு பின் வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர்  முன்னிலையில் விவசாய சங்க நிர்வாகிகள் பங்கேற்புடன் இது குறித்து பேச்சு வார்த்தை பேர்ணாம்பட்டில் நடந்தது. அதில் ஆட்சித் தலைவர் வழக்கை வாபஸ் பெறுவதற்கு ஏற்பாடு செய்வதாகவும்  மீண்டும் அக்கருவியை பொறுத்திக் கொள்ள வனத்துறையினர் அனுமதி அளிக்க செய்வதாகவும் கூறினார். ஆனால் இதுவரை வழக்கு வாபஸ் பெறபடவில்லை கருவியும் எங்களிடம் ஒப்படைக்க வில்லை. பயிர்கள் நாசமாவது தொடர்ந்து கொண்டே தான் உள்ளது நாங்கள் உருவாக்கிய பயிர்களுக்கு பாதுகாப்பில்லை எங்கள் உயிர்களுக்கும் பாதுகாப்பில்லை சடங்கு தனமான கூட்டங்களும் அறிவிப்புகளும் எங்களுக்கு நிரந்தர நிம்மதியை தரவில்லை. 12 ஆண்டுகளுக்கு முன்பு நான் தென்னை மரக்கன்றுகளை கர்நாடகா  மாநிலம் மாண்டியா மத்திய அரசு தென்னை ஆராய்ச்சி பண்ணையிலிருந்து கொண்டு வந்து குழந்தைகள் போல வளர்த்து வந்தேன். ஆனால் இன்று 14 தென்னை மரங்கள் அழிக்கப்பட்டு விட்டன. அரசிடம்  ஒரு முறை இழப்பீடு கேட்டு மனுசெய்தேன். அந்த இழப்பீடு வாங்குவதற்காக நான் பட்ட சிரமம் அவமானம் என்னால் மறக்க இயலாது எனவே எங்களுக்கு தேவை இழப்பீடு அல்ல பாதுகாப்பு உடனடியாக கருவியை அரசு தனது சொந்த செலவில் எங்களுக்கு அமைத்து தர வேண்டும். தற்போது மாங்காய் சீசன் துவங்கிவிட்டது இனி யானைகள் வருவது துவங்கிவிடும். இது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் பயன் தரும் இவ்வாறு கூறினார். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் எனும் வள்ளலார் வரிகள் இங்கு நினைவுக்கு வருகிறது. மீண்டும் மீண்டும் யானை தொல்லை மீள முடியாத விவசாயிகளின் விழிநீர் கதை எப்போது முடியும்.
0Shares

Leave a Reply