காலை உணவு திட்டம் உள்ளிட்ட ஏற்றமிகு 7 திட்டங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைந்த 20 மாதங்களில் எண்ணற்ற திட்டங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதிகளில் சொன்னவைகளில் 85 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டார். அதாவது 210-க்கும் மேற்பட்ட திட்டங்களை செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளார்.தேர்தல் வாக்குறுதிகளில் சொன்ன திட்டங்கள் மட்டுமின்றி புதிதாக பல திட்டங்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். இந்த வரிசையில் நேற்று ‘ஏற்றமிகு ஏழு திட்டங்கள்’ என்ற தலைப்பில் ஒரே நிகழ்ச்சியில் 7 பெரிய திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார்.சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் இதற்கான விழா நேற்று காலையில் நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று ஏற்றமிகு 7 திட்டங்களை தொடங்கி வைத்தார்.1) ஊட்டச்சத்து குறைபா டுள்ள குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து வழங்கும் திட்டம். 2) திருநங்கையர்களுக்கான மாதாந்திர உதவித்தொகை ரூ.1,500-ஆக உயர்த்தி வழங்குதல்.
3) முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் விரிவுபடுத்துதல். 4) பல்வேறு அரசுப்பணிகளில் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்குதல்.5) ரூ.2 ஆயிரம் கோடியில் மருத்துவ கட்டமைப்புகள் மற்றும் 44 புதிய மருத்துவமனைகளுக்கு அடிக்கல் நாட்டுதல். 6) மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல்.
7) சென்னை மாநகரப் பகுதியில் கழிவுநீர் அகற்றும் பணிகளை நவீனப்படுத்தி, தூய்மை பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்களை தொழில் முனைவோர்களாக ஒருங்கிணைத்து மேற்கொள்வதற்கான சிறப்பு திட்டங்களை தொடங்கி வைத்தல். ஆகிய திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.இந்த திட்டங்களில் மிக முக்கியமாக காலை உணவுத் திட்டம் மேலும் 500 பள்ளிகளில் விரிவாக்கம் செய்யப்படும் என்பது அனைவராலும் வரவேற்கும் திட்டமாக அமைந்துள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களின் படிப்பை ஊக்குவிக்கவும் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கவும், கற்றல் இடை நிற்றலை தவிர்க்கவும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மதுரையில் கடந்த செப்டம்பர் 15 அன்று தொடங்கி வைக்கப்பட்டது.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று திட்டத்தை தொடங்கி வைத்து பள்ளி குழந்தைகளுடன் அமர்ந்து காலை உணவை சாப்பிட்டார். பொங்கல், கேசரி, ரவா கிச்சடி, சேமியா உப்புமா என பல வகையான உணவுகள் குழந்தைகளுக்கு வழங்கப்படுவதால் இந்த திட்டத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இதனால் காலை உணவுத் திட்டம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி இந்த திட்டத்தை மேலும் 500 பள்ளிக்கூடங்களுக்கு விரிவாக்கம் செய்ய அடுத்த கட்டமாக ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த ஏற்பாடுகள் செய்து முடிக்கப்பட்டதால் மேலும் 500 பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதேபோல் மருத்துவ கட்டமைப்புகளை மேம்படுத்தும் பல்வேறு திட்டங்களையும் நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். தமிழகத்தில் மருத்துவ துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் அவ்வப்போது நிரப்பப்பட்டு வந்தாலும் இப்போது 4308 மருத்துவர்களின் காலிப்பணியிடங்களை நிரப்பு வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அதற்கான பணி நியமன ஆணைகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
தமிழ்நாடு முழுவதும் ரூ.2000 கோடி செலவில் அமைக்கப்பட்ட மருத்துவ கட்டமைப்புகளில் ரூ.1,136 கோடி மதிப்பில் 44 புதிய மருத்துவமனைகளின் கட்டுமான பணிகளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பி.கே.சேகர்பாபு, கீதாஜீவன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.