மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார்.கூட்டத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பொதுமக்கள், தங்களது தனிப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும், பொது பிரச்சனைகள் தொடர்பாக உதவிகள் வழங்கிட வேண்டியும் மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். இதில் நிலம் சம்பந்தமாக 99 மனுக்களும், சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 52 மனுக்களும், வேலைவாய்ப்பு தொடர்பாக 39 மனுக்களும், பசுமை வீடு மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பாக 42 மனுக்களும் மற்றும் இதர துறைகள் சம்பந்தமாக 94 மனுக்களும் என மொத்தம் 326 மனுக்கள் பெறப்பட்டன.இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.அதனைத் தொடர்ந்து நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக சுயவேலைவாய்ப்பு திட்டத்தில் ஆவின் பாலகம் அமைப்பதற்காக 4 பயனாளிகளுக்கு மானியத்தொகையாக தலா ரூ.50,000 வீதம் ரூ.2,00,000-ற்கான அனுமதி ஆணைகளையும், சிறு மற்றும் குறுந்தொழில் சுய வேலைவாய்ப்பு வங்கிக்கடன் மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு சுய தொழில் புரிய தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலிருந்து ரூபாய் ஒரு இலட்சம் கடன் தொகை பெறப்பட்டதை தொடர்ந்து, அதில் ரூ.25 ஆயிரம் மானியத் தொகைக்கான காசோலையையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.கூட்டத்தில், தனித்துணை ஆட்சியர் பி.ப.மதுசூதணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கா.காயத்திரி சுப்பிரமணி, பேச்சு பயிற்சியாளர் சுப்புலட்சுமி, சைகை மொழி பெயர்ப்பாளர் சசிகலா மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.