ஆர்கே பேட்டை அருகே 85 வயது மூதாட்டியிடம் 8 சவரன் செயினை பறித்து சென்ற வழக்கில் 2 பேர் கைது :
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த ஆர்கே பேட்டை அருகிலுள்ள எறும்பி என்ற கிராமத்தில் வீட்டின் முன்பு 85 வயது மூதாட்டி வேண்டாமிர்தம் என்பவர் உட்கார்ந்து இருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 8 சவரன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் மறைந்தனர். இது குறித்த புகாரின் பேரில் ஆர்கே பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்ட விசாரணையில் திருவள்ளூர் மாவட்டம் கனகம்மாசத்திரம் அடுத்த காஞ்சிப்பாடியைச் சேர்ந்த டில்லி பாபு மற்றும் அவனது கூட்டாளியான ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த புருஷோத் ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் வந்து வேண்டாமிர்தம் என்பவர் கழுத்தில் அணிந்திருந்த 8 சவரன் தங்க சங்கிலியை பறித்துச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து தங்க சங்கிலியை பறித்து சென்ற வழக்கில் காஞ்சி பாடியை சேர்ந்த டில்லிபாபு மற்றும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த புருஷோத் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 8 சவரன் தங்க சங்கிலி, ஒரு இருசக்கர வாகனம், 3 செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.