26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாலை நேர தர்ணா போராட்டம் :
திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி அருகே காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் மாலை நேர தர்ணா போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஆர்.எம்.செந்தில்குமரன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சே.ஜோதி, இணை செயலாளர் எஸ்.ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோட்ட தலைவர் இரா.குமரன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் கே.எம்.பிரதீப் ஹரேஷ்குமார் கோரிக்கை விளக்கவுரையாற்றினார். இதில் மாநில பொதுச் செயலாளர் அண்ணா குபேரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது, நில அளவைப் பணியாளர்களின் பணிச்சுமையை குறைத்திட வேண்டும். நில அளவை சார்ந்த அனைத்து பணிகளையும் கருத்தில் கொள்ளாமல் உட்பிரிவு பட்டா மாறுதல் பணியினை மட்டும் ஆய்வுக்குட்படுத்தும் போக்கினை கைவிட வேண்டும். நில அளவர் முதல்கூடுதல் இயக்குனர் வரை உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும். புற ஆதார ஒப்பந்த முறையில் புல உதவியாளர்கள் நியமனத்தை கைவிட்டு அனைத்து குறுவட்டங்களுக்கும் இரண்டு புல உதவியாளர்களை கால முறை ஊதியத்தில் நிரந்தரமாக பணியமர்த்திட வேண்டும். மாவட்ட அளவில் நவீன மறு நில அளவைத் திட்டப் பணிகளை தனி உதவி இயக்குனர்கள் தலைமையில் ஏற்படுத்திட வேண்டும். தள்ளுபடி செய்யப்பட்ட மனுக்கள் மீது ஆய்வு எனும் பெயரில் ஊழியர்களை தண்டனை குற்றவாளிகள் போல் நடத்துவதை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட 26 அம்ச கோரிக்கைகள் குறித்து பேசினார்.
இந்த மாலை நேர தர்ணா போராட்டத்தில் பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் ஏ.மணிகண்டன், எஸ்.காந்திமதிநாதன், க.திவ்யா, க.வெண்ணிலா, கோ.இளங்கோவன், கொ.மெல்கிராஜாசிங், ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் ஒய். தாலிப் நன்றி தெரிவித்தார்.