தமிழ்நாடு சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு.
தமிழ்நாடு சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.2023-ம் ஆண்டுக்கான முதல் தமிழ்நாடு சட்டசபை கூட்டம் கடந்த திங்கட்கிழமை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி உரையுடன் தொடங்கியது. அப்போது, தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரையில் உள்ள 65வது பத்தியை ஆளுநர் ஆர்.என். ரவி வாசிக்க மறுத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.அந்த பத்தியில் சமூகநீதி, சுயமரியாதை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி சமத்துவம், பெண்ணுரிமை, மத நல்லிணக்கம், பல்லுயிர் ஓம்புதல், பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், திராவிட மாடல் ஆட்சி, தமிழ்நாடு அமைதிப் பூங்கா’ என்ற வார்த்தைகள் இடம்பெற்ற நிலையில் அந்த வார்த்தைகளை ஆளுநர் ஆர்.என்.ரவி வாசிக்க மறுத்தார். மேலும், மாநில அரசு தயாரித்து கொடுத்த உரையை தாண்டி ஆளுநர் மேலும் சில கருத்துக்களை கூறினார். இதனால், அவையில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. இதன் பின்னர், கூட்டம் நிறைவடையும் முன்னரே, இந்திய தேசிய கீதம் இசைக்கும் முன்னரே அவையில் இருந்து ஆளுநர் ஆர்.என். ரவி வெளியேறிவிட்டார்.
இந்த சம்பவம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஆளுர் உரையுடன் சட்டப்பேரவை திங்கட்கிழமை கூடிய நிலையில் தொடர்ந்து பல்வேறு விவகாரங்கள் குறித்து வாதங்கள் நடைபெற்றன.பல்வேறு அறிவிப்புகளும் வெளியாகின. இந்நிலையில், கவர்னரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது முதல்-அமைச்சர் உரையாற்றிய பின்னர் சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.