திருவள்ளூர் மாவட்டத்தில் கால்நடைகளை சாலைகளில் திரியவிட்டால் கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம்
திருவள்ளூர் டிச 26 : திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலைகளில் பொது மக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்துகின்ற வகையில் விடப்படுகின்ற கால்நடைகளை பிடித்து மாவட்ட அளவிலும், ஊராட்சி ஒன்றிய அளவிலும், ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள பட்டியில் அடைக்கப்படுகிறது. மேலும் கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.2000 அபராதத் தொகையாக விதிக்கப்படும்.திருவள்ளுர் மாவட்டத்தில் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட கிராம ஊராட்சி அளவில் அமைக்கப்பட்டுள்ள குழுக்கள் மூலம் காவல் துறையுடன் இணைந்து பொதுமக்களுக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகள் பிடிக்கப்படும். மேலும் பிடிக்கப்படும் கால்நடைகளை 24 மணி நேரத்திற்குள் ரூ.2000-அபராதத் தொகையாக செலுத்த வேண்டும். மேலும் உள்ளாட்சி அமைப்புகள் அளவில் அமைக்கப்பட்டுள்ள குழுவிடம் கால்நடை வளர்ப்பவர்களின் வீடு அல்லது கால்நடை பிடிபட்ட எல்லைக்குட்பட்ட காவல் ஆய்வாளரின் பரிந்துரை கையொப்பத்தை பெற்று பிரமாண பத்திரம் சமர்ப்பித்த பின்னரே கால்நடைகளை கால்நடை உரிமையாளர்கள் கொண்டு செல்ல வேண்டும். மேலும் 24 மணி நேரத்திற்கு பின்பும் உரிமை கோரப்படாத கால்நடைகள், உள்ளாட்சி அமைப்புகள் அளவில் அமைக்கப்பட்டுள்ள குழுக்கள் மூலம் பொது ஏலம் விடப்படும். எனவே, கால்நடை உரிமையாளர்கள் தங்கள் கால்நடைகளை அவர்களின் சொந்த இடங்களிலேயே கட்டி வைத்து பராமரிக்கவும், பொது வெளியில் விடாமல் முறையாக பராமரித்து கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் கேட்டுக் கொண்டார். மேலும், கால்நடைகளை பொது வெளியில் விடும் பட்சத்தில் பிராணிகள் வதை தடுப்புச் சட்டம், 1960 பிரிவு 11 (1) உட்பிரிவின் படி அபராதம் விதிக்கப்பட்டு, காவல்துறையில் புகார் பதிவு செய்யப்பட்டு மாடுகளின் உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.