திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு .
திருவள்ளூர் டிச 21 : திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட வெங்கத்தூர் ஊராட்சியில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்பைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இங்கு தினசரி சேகரமாகும் 5 முதல் 10 டன் குப்பையை வெங்கத்தூர் ஊராட்சிக்குட்பட்ட கணேசபுரம் பகுதியில் உள்ள நீர் நிலையான கூவம் ஆற்றில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக கொட்டி வந்தனர். இந்த பகுதியில் நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்து வருவதாலும், திருமண மண்டபங்கள், ஹோட்டல்கள் என அனைத்தும் அதிகரித்து வருவதாலும் கழிவுப் பொருட்களும் அதிகளவில் சேர்கிறது. இதனால் கூவம் ஏரி முற்றிலும் மறைந்து குப்பைக் கிடங்காக மாறியது. தினந்தோறும் 5 டன் குப்பைகள் கொட்டப்படுவதால் அப்பகுதியில் குப்பைகள் மலைபோல் தேங்கி துர்நாற்றம் வீசுயது. இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுவதாக செய்திகள் வெளியானது. இதனையடுத்து நீர் நிலைகளில் குப்பைகளை கொட்டக் கூடாது என உயர்நீதிமன்ற உத்தரவு இங்கும் அமல்படுத்தப்பட்டது. இதனையடுத்து வெங்கத்தூர் ஊராட்சியில் சேரும் குப்பைக் கழிவுகளை வெங்கத்தூர் கிராமத்தில் கொட்ட ஊராட்சி நிர்வாகம் மற்றும் வட்டார வளர்ச்சி நிர்வாகம் முடிவு செய்து குப்பைகளை அங்கு கொட்டி வந்தனர்.அதனால் வெங்கத்தூர் கிராமத்தில் உள்ள மக்கள் குப்பை கழிவுகளை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து குப்பைக் கழிவுகளை கொட்டுவதில் சிரமம் ஏற்பட்டது. இந்நிலையில் வெங்கத்தூரில் குப்பைகளை கொட்டக் கூடாது,வெங்கத்தூர் கிராமத்தை தனி பஞ்சாயத்தாக அறிவிக்க வேண்டும், நீர் நிலைகளை சுத்தப்படுத்தி தர வேண்டும் என்பதை வலியுறுத்தி கிராம மக்கள் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கைகளில் பதாகைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பினர்.வெங்கத்தூர் ஊராட்சியில் மணவாளநகர் கணேசபுரம் வெளியிட்ட பல்வேறு பகுதிகள் இருப்பதால் அதனை பிரித்து வெங்கத்தூர் கிராமத்தை தனி பஞ்சாயத்தாக அறிவிக்க வேண்டும். நீர் நிலைகளை சுத்தப்படுத்தி தர வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸிடம் புகார் மனு அளித்தனர்.அப்பொழுது ஆட்சியர் அந்த மனு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தின் பேரில் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.