திருத்தணி ஆந்திராவிலிருந்து கடத்தி வரப்பட்ட 2 கிலோ கஞ்சா மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் -2 பேரை கைது செய்து விசாரணை
திருவள்ளூர் அக் : ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கு திருவள்ளூர் மாவட்டம் வழியாக கஞ்சா கடத்தி வருவது தொடர்கதையாக இருக்கிறது. இதனால் திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் தமிழக ஆந்திர எல்லையோரப் பகுதியான திருத்தணியில் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி இன்று திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த பொன்பாடி சுங்கச்சாவடி அருகே மத்தூரில் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஆந்திர மாநிலம் புத்தூரிலிருந்து இருசக்கர வாகனத்தில் வந்த 2 இளைஞர்களை மடக்கி சோதனை செய்தனர். அப்போது அவர்கள் இருவரும் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகத்தின் பேரில் அவர்களிடம் மேலும் சோதனை செய்ததில் அவர்களிடம் விற்பனைக்காக கொண்டு சென்ற 2 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து ஆந்திராவிலிருந்து கடத்தி வரப்பட்ட 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த திருத்தணி போலீசார் கடத்தலில் ஈடுபட்ட ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தைச் சேர்ந்த ரியாஸ் மற்றும் சலேஷா ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.