கள்ளக்குறிச்சி மாணவி மரணத்தில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் அம்பேத்கர் மக்கள் இயக்கம் வலியுறுத்தல்.
கள்ளக்குறிச்சி மாணவியின் மர்ம மரணத்திற்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும் என்றும் அதில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கடுமையாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அம்பேத்கர் மக்கள் இயக்க செயல் தலைவர் இளமுருகு முத்து வலியுறுத்தியுள்ளார். தமிழக காவல்துறை ஒரு வெளிப்படையான விசாரணை செய்து, இதில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு உரிய தண்டனை பெற்று தந்தால் தான், உயிரிழந்த மாணவியின் பெற்றோருக்கு, சக மாணவ மாணவியர்களுக்கும், இந்த சமூகத்திற்கும் இந்த அரசின் மீதும், காவல் துறையின் மீதும் நம்பிக்கை வரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அமைதியான வகையில் சென்று கொண்டு இருந்த போராட்டம், இந்த அளவுக்கு வன்முறையாக மாறியதற்கு, தமிழக அரசின் அலட்சிய போக்கு தான் காரணம் என்று அனைவரும் கருதுகின்றனர். அதேபோன்று, அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரம் படைத்தவர்களின் குறுக்கீடு ஏதும் இல்லாத வகையில் தமிழக காவல்துறை ஒரு வெளிப்படையான விசாரணை செய்து, இதில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு உரிய தண்டனையை பெற்று தந்தால் தான், உயிரிழந்த மாணவியின் பெற்றோருக்கும், சக மாணவ மாணவியர்களுக்கும் இந்த நேரத்தில் ஆறுதல் அளிக்கக்கூடியதாக அமையும்.
மேலும் இந்த பள்ளியில் இதுபோன்ற மர்ம மரணங்கள் இதற்கு முன்பும் நடந்துள்ளது எனவும் ஆனால் அது வெளியுலகுக்கு தெரியாமல் பார்த்து கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆதலால் தமிழக காவல் துறை இதனையும் கணக்கில் கொண்டு எந்த பாரபட்சமும் இன்றி உரிய விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொணர்ந்து குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று இளமுருகு முத்து வலியுறுத்தியுள்ளார்…