பழனி கல்லூரி மாணவர் பெட்ரோல் தயாரித்த செய்தி

Loading

பழனியை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் பிளாஸ்டிக்‌ கவர் கழிவுகளில் இருந்து பெட்ரோல் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு அதில் வெற்றியும் பெற்றுள்ளார். மேலும் தொடர்ந்து இதுகுறித்த ஆய்விலும் ஈடுபட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ளது பாலசமுத்திரம் பேரூராட்சி. இங்கு வசித்து வரும் வைகுந்தம் – தேவி தம்பதிக்கு கார்த்திக் என்ற மகன் உள்ளார். இவர் பழனி அருள்மிகு பழனியாண்டவர் ஆண்கள் கலைக் கல்லூரியில் வேதியியல் பிரிவில் முதுநிலை இறுதிஆண்டு படித்து வருகிறார்.இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து வாகன எரிபொருள் தயாரிக்கும் ஆய்வில் ஈடுபட்டு வருகிறார்.இந்நிலையில் கார்த்திக் எடுத்துவந்த முயற்சியில் தற்போது வெற்றி பெற்றுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது :- உலகம் முழுவதும் பிளாஸ்டிக் கழிவுகளால் இயற்கை பேரிடர் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் ஆண்டொன்றுக்கு 360 லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் உருவாகிறது.இவற்றில் இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு முப்பத்தி ஏழு லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் உருவாகிறது. இவற்றில் 8.7 சதவிகித பிளாஸ்டிக் கழிவுகள் மட்டுமே மறுசுழற்சிக்கு பயன்படுத்தப்படுகிறது.மீதமுள்ள பிளாஸ்டிக் கழிவுகள் அனைத்தும் பூமிக்குள் சென்று இயற்கை இடர்பாடுகளை உருவாக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே இவ்வாறு வெளியேற்றப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தி பெட்ரோலுக்கு மாற்றாக எரிபொருள் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டேன்.இதன்படி கடந்த இரண்டு ஆண்டுகளாக எடுத்துக்கொண்ட முயற்சியில் மூலம் தற்போது பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து பெட்ரோல் எடுக்கும் முயற்சி வெற்றியடைந்துள்ளது.
பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து ஒரே தரத்தில் உள்ள பிளாஸ்டிக் கவர்களை மட்டும் பிரித்து அவற்றின் மூலம் பெட்ரோல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒரு கிலோ அளவுள்ள பிளாஸ்டிக் கவர்களை எரிப்பதன் மூலம் 300 மில்லி லிட்டர் பைராலிஸிஸ் பெட்ரோல் கிடைப்பதாகவும், இதில் 10 சதவிகிதம் அப்சலூட்லி ஆல்கஹாலை சேர்த்தால் வாகனத்தின் இன்ஜின் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க முடியும் என்றும் தெரிவித்தார்.
ஒரு லிட்டருக்கு ஐம்பத்தி எட்டு கிலோமீட்டர் வரை இருசக்கர வாகனம் இயங்கும் என்றும் தெரிவித்தார். தற்போது பரிசோதனை நிலை என்பதால் தயாரிக்கப்படும் பெட்ரோல் விலை அதிகமாக இருப்பதாகவும், அதேவேலையில் இதை பெரிய அளவில் உற்பத்தி செய்யும்போது, பிளாஸ்டிக் கழிவுகளை எரிப்பதன் மூலம் வரும் எரிவாயுவை சமையலுக்கும், பிளாஸ்டிக் குப்பைகளை எரித்து அதன் மூலம் இறுதியாக கிடைக்கும் மட்டு எனப்படும் கழிவுகளை சாலை அமைப்பதற்கும், கட்டிடங்களுக்கான கான்கிரீட் போடுவதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும், இதன்மூலம் தற்போதைய பெட்ரோலின் விலையை விட குறைவான விலைக்கு பைராலிஸிஸ் பெட்ரோலை விற்பனை செய்ய முடியும் என்றும் தெரிவித்தார். பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து பெட்ரோல் தயாரிக்கும் முயற்சியில் இதற்கு முன்னர் சிலர் ஈடுபட்டிருந்தாலும், அவர்களின் கண்டுபிடிப்புகளில் வாகன எஞ்சின்கள் பழுதாகும் வாய்ப்பு அதிகம் உள்ளது. ஆனால் தற்போது தன் முயற்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பெட்ரோல் வாகன இஞ்சினை எவ்விதத்திலும் பாதிக்காது என்றும் தெரிவித்தார்.
மேலும் அனைத்து பிளாஸ்டிக் கழிவுகளையும் ஒன்றாக கலக்காமல் தரம் பிரித்து தனித்தனியாக  எடுக்கப்படும் பெட்ரோலில் 2ஸ்ட்ரோக் பைக்குகளுக்கும், 4ஸ்ட்ரோக் பைக்குகளுக்கும் என இரண்டுவிதமான தரத்தில் பெட்ரோல் கிடைக்கிறது என்றும்‌ தெரிவித்தார். பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து எடுக்கப்படும் பெட்ரோல் மூலம் மாணவன்‌ தனது இருசக்கரவாகனத்தை இயக்குவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது‌. மாணவனின் இந்த முயற்சிக்கு மத்திய, மாநில அரசுகள் ஊக்கமளிக்கவும், இதுகுறித்த ஆய்வுகளை மேற்கொண்டு செய்வதற்கான‌ உதவிகளையும் செய்ய வேண்டுமென மாணவன்‌‌ கார்த்திக்  கோரிக்கை விடுத்துள்ளார்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *