தஞ்சை அருகே மாணவியை காதலித்த வாலிபர் அடித்துக்கொலை – 2 பேர் கைது

Loading

தஞ்சாவூர்:
தஞ்சையை அடுத்த வாளமர்கோட்டை வாண்டையார் தெருவை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவருடைய மகன் ஆனந்த் (வயது 21).  ஐ.டி.ஐ. படித்து முடித்துள்ள இவர் அதே பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவி ஒருவரை காதலித்து வந்ததாக தெரிகிறது.
இந்த மாணவி ஆனந்திற்கு தங்கை உறவு முறையாகும். இதனால் மாணவியை காதலித்த ஆனந்தை அந்த மாணவியின் பெற்றோர் கண்டித்தனர். ஆனால் அவர் யார் பேச்சையும் கேட்காமல் தொடர்ந்து அந்த மாணவியை காதலித்து வந்துள்ளார். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட சூரக்கோட்டையை சேர்ந்த அந்த மாணவியின் அத்தை மகனான உதயகுமார் (25) மிகுந்த ஆத்திரம் அடைந்தார்.
இதனையடுத்து அவர், ஆனந்திடம் இந்த பழக்கம் தவறானது எனவும், மாணவியை தொந்தரவு செய்யாமல் அவளை விட்டு விலகிவிடுமாறும் தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கல்லணைக்கால்வாய் படித்துறையில் ஆனந்த் அமர்ந்து இருந்தார். இந்த தகவலை அறிந்த உதயகுமார் சம்பவ இடத்திற்கு சென்று, தனது அத்தை மகளை காதலிப்பதை கைவிடக்கோரி மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த உதயகுமார் மண்வெட்டி கட்டையால் ஆனந்தின் பின் தலை மற்றும் முகத்தில் சரமாரியாக அடித்துள்ளார். இதில் ரத்தவெள்ளத்தில் மயங்கி விழுந்த ஆனந்தை அந்த பகுதியை சேர்ந்த சிலர் பார்த்து தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தஞ்சை தாலுகா போலீஸ் நிலையத்தில் முத்துகிருஷ்ணன் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கார்த்திகேயன் வழக்குப்பதிவு செய்து உதயகுமார் மற்றும் மாணவியின் தந்தை ரவி (52) ஆகிய இருவரையும் கைது செய்தார். கைதான இருவரிடமும் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவியை காதலித்த வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தஞ்சையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *