திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் ஆவின் பாலகம் அமைக்க நிழல் தரும் மரங்களை வெட்டியதால் சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி
மரங்களை வெட்டக்கூடாது என்ற நீதிமன்றத்தின் உத்தரவை மீறி நடந்த சம்பவத்திற்கு ஆட்சியர் பதில் என்ன என்பதே கேள்விக்குறி?
திருவள்ளூர் மார்ச் 17 –
வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்க வேண்டும் என பொது மக்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள் திருவள்ளூர் மாவட்டத்தையே பசுமையாக்கும் திட்டத்தோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கடந்த ஆட்சிக் காலத்தில் அமைச்சர்கள், அப்போதைய ஆட்சியர்களால் நடப்பட்டு இயற்கை எழில் கொஞ்சும் வகையில் பல வகையான மரங்களை பராமரித்து வந்தனர்.
இந்நிலையில் தமிழக அரசின் ஆவின் பால் விற்பனையகம் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைக்கப்பட உள்ளாதல் அதற்கான மின் இணைப்பு வழங்க வேண்டி உள்ளதால் எழில் கொஞ்சும் மரங்களை ஈவு இரக்கமின்றி வெட்டி சாய்த்துள்ளனர். மின் கம்பத்திலிருந்து ஆவின் பாலகம் வரை மண்ணில் புதைத்தபடி கொண்டு வர 70 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் செலவாகும் என்பதால் மரங்களை வெட்டி சாய்த்ததாக ஒப்பந்ததாரர் தெரிவித்துள்ளார்.
மரங்களை வெட்டக்கூடாது என்று நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தும், அதை கடைபிடிக்காமல் ஆவின் பாலகத்திற்கு மின் இணைப்பு வழங்க 10 ஆண்டுகளுக்கும் மேலாக பராமரிக்கப்பட்டு வந்த மரங்களை வெட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே நடந்த இந்த சம்பவத்திற்கு ஆட்சியரின் பதில் என்னவாக இருக்கும் என்பதும் அவர்களின் கேள்வியாக உள்ளது.