இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடையும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு
தமிழகத்தில் 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர்கள், 7,621 பேரூராட்சி உறுப்பினர்கள் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
கடந்த ஜனவரி மாதம் 28ஆம் தேதி முதல் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் பணிகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து கடந்த வாரம் இறுதியில் வேட்பாளர் பட்டியலும் வெளியானது. அவ்வாறு வாக்காளர் பட்டியல் வெளியிட்டத்தை தொடர்ந்து தற்போது தேர்தல் பரப்புரைகள் நடைபெற்று வருகிறது.
அதனை தொடர்ந்து பேரூராட்சிகளில் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கும் மார்ச் 4 ஆம் தேதி மறைமுக தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனிடையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து தேர்தல் விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அந்த அடிப்படையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி தேர்தல் நடைபெறுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு தேர்தல் பிரச்சாரத்தை நிறுத்த வேண்டும். அதன்படி இன்று (பிப்.17) மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடையும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அதன்பின் வெளியூர்களைச் சேர்ந்தவர்கள் பிரச்சாரம் முடிந்ததும் அந்தப் பகுதிகளை விட்டு வெளியேற வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் தேர்தல் தொடர்பான புகார்களை பொதுமக்கள் தெரிவிக்க தொகுதி கண்காணிப்பாளர் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்களையும் மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.