“தமிழகத்தில் தளர்வுகளும், கூடுதல் கட்டுப்பாடுகளும்” : முதல்வர் ஸ்டாலின் நாளை ஆலோசனை!!
தமிழகத்தில் முழு ஊரடங்கு மற்றும் இரவு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசிக்கிறார்.
தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் பாதிப்பு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக நேற்று ஒரேநாளில் 30,055 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 31 லட்சத்து 94 ஆயிரத்து 260ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 37 ஆயிரத்து 312 ஆக அதிகரித்த நிலையில், 29 லட்சத்து 45 ஆயிரத்து 678 பேர் இதுவரை தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.
குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ,திருவள்ளூர் ,கோவை ,திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொற்று பாதிப்பு சற்று குறைய தொடங்கியுள்ளது. தொற்று பரவல் தொடர்ந்து குறையும் பட்சத்தில் ஞாயிறு முழு ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஜனவரி 31ஆம் தேதியுடன் தமிழகத்தில் ஊரடங்கு முடிவுக்கு வர உள்ள நிலையில் அதை நீட்டிப்பது குறித்தும், கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை காலை ஆலோசனை நடைபெறுகிறது. இதில் முழு ஊரடங்கு மற்றும் இரவு ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும், 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ,சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். ஏற்கனவே தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் கடந்த 9 ,14 மற்றும் 23 ஆகிய தேதிகளில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டதுடன், இரவு நேர ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.