திருடப்பட்ட இரு சக்கர வாகனம்: வழக்கு முடிவுக்கு வந்தது எப்படி?
சேலம் அருகே சினிமா பாணியில் இரு சக்கர வாகனத்தை திருடிச் சென்ற விவகாரத்தில், பெற்றோர் பணம் தருவதாக எழுதி கொடுத்ததையடுத்து, வழக்கு முடிவுக்கு வந்தது.
சேலம் சாந்தி தியேட்டர் பகுதியில் ராம்பாலாஜி என்பவருக்கு சொந்தமான பழைய இருசக்கர வாகனங்களை வாங்கி விற்பனை செய்யும் நிறுவனம் உள்ளது. இங்கு கடந்த வெள்ளிக்கிழமை இரண்டு இளம் ஜோடியினர் வந்துள்ளனர். அதில் ஒரு ஜோடி, தாங்கள் புல்லட் ரக பைக்கை வாங்க வந்திருப்பதாகக் கூறி, அங்கிருந்த விலை உயர்ந்த இரு சக்கர வாகனங்களை பார்வையிட்டுள்ளனர். பின்னர் இருசக்கர வாகனத்தை ஓட்டிப்பார்ப்பதாக கூறி இருவரும் எடுததுச் சென்றனர்.
அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், கடையில் இருந்த இன்னொரு ஜோடியை பிடித்து டவுன் குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், வண்டியில் சென்ற பெண்ணை மட்டும் தங்களுக்கு தெரியும் என அவர்கள் கூறினர். இதை தொடர்ந்து, பெண்ணின் பெற்றோரை போலீசார் நேரில் வரவைத்தனர். அப்போது, வண்டிக்கான பணத்தை தாங்கள் கொடுத்து விடுவதாக பெற்றோர் கூறியதையடுத்து, கடை உரிமையாளர் வழக்கை திரும்பப் பெற்றுக்கொண்டார். சேலத்தைச் சேர்ந்த அந்த இளம் பெண் கல்லூரியில் படித்து வருவதாகவும், அவர் தன் காதலனுடன் சென்றதாகவும் கூறப்படுகிறது.