இந்தியாவின் பெருமைமிகு மாணிக்கம்: பகவான் பிர்சா முண்டா
இந்தியாவின் பெருமைமிகு மாணிக்கம்: பகவான் பிர்சா முண்டா
இந்திய விடுதலையின் பவளவிழாவை இந்தியா கொண்டாடிக்
கொண்டிருக்கும் இத்தருணத்தில் அடக்குமுறைகள் நிரம்பிய பிரிட்டிஷ்
ஆட்சிக்கு எதிராக தாய்நாட்டின் விடுதலைக்காகத் துணிவோடு போராடிய
வீரர்களின் வரிசையில் ஒருவரது மகத்தான பெயர் மட்டும் உயர்ந்து
நிற்கிறது. அதுதான் பகவான் பிர்சா முண்டாவின் பெயர் ஆகும். பிர்சா
முண்டா மிகக் குறுகிய காலத்திற்கு மட்டுமே வாழ்ந்தார் எனினும் அவரது
வாழ்க்கை துணிவு மிக்க ஒன்றாகும். அவரது தீரமிக்க செயல்களும்
புனிதமான நற்செயல்களும் எண்ணற்றவர்களை அவரைப் பின்பற்றுவோராக
மாற்றின. அநீதிக்கும், ஒடுக்குமுறைக்கும் எதிராகப் போராடும் வகையில்
எண்ணற்ற துணிவான செயல்கள் நிரம்பிய அவரது வாழ்க்கையானது
பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான எதிர்ப்புக் குரல்களில் வலுவான ஒன்றாகவே
திகழ்ந்தது.
1875ஆம் ஆண்டு நவம்பர் 15 அன்று இன்றைய ஜார்க்கண்ட் பகுதியில் உள்ள
உளிஹாட்டு என்ற கிராமத்தில் முண்டா பழங்குடி இனத்தைச் சேர்ந்த
குடும்பம் ஒன்றில் பிறந்த பிர்சா, கடுமையான வறுமையுடனேயே தனது
குழந்தைப் பருவத்தைக் கழித்தார். இயற்கையோடும், இயற்கை தரும்
ஆதாரவளங்களோடும் ஒன்றியைந்து வாழ்ந்து கொண்டிருந்த பழங்குடிகள்
வசிக்கும் மத்திய மற்றும் கிழக்குப் பகுதி இந்தியாவின் அடர்ந்த காடுகளிலும்
பிரிட்டிஷ் ஆட்சி தனது சுரண்டலை நீடிக்கத் தொடங்கிய நேரம் அது.
பழங்குடியினரின் ‘குண்ட்காட்டி’ என்ற வேளாண் முறையை
அழித்தொழித்து, ஒரு நிலப்பிரபுத்துவ ஜமீன்தாரி முறையை பிரிட்டிஷ்
ஆட்சியாளர்கள் சோட்டா நாக்பூர் பகுதியில் அறிமுகம் செய்தனர்.
பழங்குடியினரை மேலும் மேலும் சுரண்ட உதவுவதற்கென காட்டுப்
பகுதிகளுக்கு அந்நியரான கந்துவட்டிக்காரர்கள், ஒப்பந்தக்காரர்கள்,
நிலப்பிரபுக்கள் ஆகியோரை பிரிட்டிஷ் ஆட்சி காடுகளுக்குள் அழைத்து
வந்தது. அதே நேரத்தில் பிரிட்டிஷ் ஆட்சியின் தீவிரமான உதவியோடு
கிறித்துவ மதப் பிரச்சாரகர்கள் இந்தப் பகுதிகளில் இடைவிடாது செயல்பட்டு
வந்ததோடு, காடுகளில் வசிக்கும் பழங்குடிகளின் மத-கலாச்சார நெறிகளை
அவமதிக்கும் வகையில் அவர்கள் தலையீடும் செய்து வந்தனர்.
தன் கண்களுக்கு முன்னால் நிகழ்ந்து வந்த இவை அனைத்தையும்
பார்த்தபடியே இளம் பிர்சா வளர்ந்து வந்ததோடு, உள்ளூர் மக்களின்
நலன்களுக்கு எதிரான வகையில் (பழங்குடிகளின் எதிரிகளாக கருதப்பட்டு
வந்த) டிக்குகளும் காலனியாதிக்க சக்திகளும் எவ்வாறு செயல்பட்டு
வருகின்றன என்பதையும் அவர் உணரத் தொடங்கினார். இந்த கள்ளக்
கூட்டணிக்கு எதிரான போராட்டத்தை தொடர்ந்து நடத்த வேண்டுமென்ற
உறுதியையும் இந்தப் புரிதல் அவருக்குள் தூண்டிவிட்டது.
1880களில் இந்தப் பகுதியில் வன்முறையற்ற வழிமுறைகளை மேற்கொண்டு,
பழங்குடியினரின் உரிமைகளை திரும்ப நிலைநாட்ட வேண்டும் என்று கோரி
பிரிட்டிஷ் ஆட்சிக்கு மனுக்களை அனுப்பி வைக்கும் இயக்கம் வலுப்பெற்று
வந்ததையும் இளம் பிர்சா கண்ணுற்றார். எனினும் கொடுங்கோன்மை மிக்க
காலனியாதிக்க ஆட்சி இந்தக் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கவில்லை.
வெகுவிரைவிலேயே பிரிட்டிஷ் ஆட்சி வனப்பகுதிகளில் அறிமுகப்படுத்திய
ஜமீன்தாரி முறை பழங்குடியினரை அந்த நிலத்தின் உரிமையாளர்கள்
என்பதிலிருந்து அந்த நிலங்களில் உழைக்கும் உழைப்பாளிகள் என்ற
வகையில் மாற்றியது. வனப்பகுதியில் அமைந்திருந்த பழங்குடி பகுதிகளில்
கட்டாய உழைப்பை இந்த நிலப்பிரபுத்துவ அமைப்பு மேலும்
தீவிரப்படுத்தியது. ஏழ்மையான அப்பாவி பழங்குடியினரின் மீதான சுரண்டல்
இப்போது பொறுத்துக் கொள்ள இயலாத நிலையை எட்டியது.
இவை அனைத்துமே பழங்குடியினரின் நலனுக்காகப் போராட வேண்டும்
என்ற உணர்வை பிர்சாவிடம் உருவாக்கியது. மத ரீதியான விஷயங்களில்
சக பழங்குடியினரிடையே அவர் புதியதொரு வெளிச்சத்தைப் பாய்ச்சினார்.
பழங்குடியினரின் வாழ்க்கை முறை மற்றும் கலாச்சாரத்தினை இழிவாகக்
கருதும் மதப் பிரச்சாரகர்களுக்கு எதிராக அவர் நின்றார். அதே நேரத்தில்,
பழங்குடியினர் பின்பற்றி வந்த பல்வேறு மதச் சடங்குகளை சீரமைத்து,
அவர்களிடையே நிலவிய மூட நம்பிக்கைகள் நிரம்பிய பல சடங்குகளை
தவிர்க்குமாறு செய்தும், புதிய கருத்துக்களையும், புதிய துதிகளையும்
அறிமுகம் செய்தும், பழங்குடிகளின் பல பழக்க வழக்கங்களை
சீர்திருத்தியும், பழங்குடியினப் பெருமையை மீட்டெடுத்து உயிர்ப்பிக்க
தீவிரமாகச் செயல்பட்டார். ’முன்னோடியான அரசருக்கே வெற்றி!’
என்பதையும் பிர்சா பழங்குடியினரிடம் வலியுறுத்தி வந்தார். இதன் மூலம்
வனப்பகுதியில் உள்ள நிலத்தின் மீது பாரம்பரியமாக இருந்துவரும்
சுயேச்சையான உரிமைக்கான பழங்குடியினரின் இறையாண்மையை அவர்
முன்னெடுத்து வைத்தார். இவ்வகையில் மகத்தானதொரு மக்கள் தலைவராக
பிர்சா உருவெடுத்தார். அவரைப் பின்பற்றியவர்கள் பகவான், தாரதி அபா
என்றும் அவரை அழைக்கத் தொடங்கினர்.
அவர் இந்த ஆதிக்க சக்திகளின் சுரண்டல் மற்றும் கொடூரத் தன்மையை
பழங்குடிகள் உணரச் செய்தார். தங்களைச் சுரண்டி வரும் டிக்குகளோடு
கூடவே, ஒடுக்குமுறை நிரம்பிய பிரிட்டிஷ் ஆட்சிதான் உண்மையான எதிரி
என்பதையும் அவர் உணர்ந்தவராக இருந்தார். பழங்குடிகள் எதிர்கொள்ளும்
அனைத்து வகையான பிரச்சனைகளுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும்
காரணமாக விளங்குவது பிரிட்டிஷ் காலனி ஆட்சியே என்பதை பிர்சா
முண்டா மிகத் தெளிவாக அடையாளம் காட்டினார். ”(பிரிட்டிஷ்
மகாராணியின் ஆட்சிக்கு முடிவு கட்டி, நமது (பழங்குடிகளின்) ஆட்சியை
நிறுவுவோம்” என்பதையும் அவர் மிகத் தெளிவாக உணர்ந்தவராக இருந்தார்.
இந்த சிந்தனைப் பொறியை பழங்குடி மக்களிடையே பகவான் பிர்சா தூண்டி
விட்டார். தங்களது சமூக, பொருளாதார, அரசியல், கலாச்சார
விடுதலைக்காக பிர்சாவின் தலைமையின்கீழ் முண்டா, ஒரோன் மற்றும்
இதர பழங்குடி இனத்தவரும், பழங்குடியில்லாத இதர பிரிவினரும் அவரது
அறைகூவலை ஏற்று அணிதிரண்டனர். காலனியாதிக்க ஆட்சியாளர்கள்,
சுரண்டிவரும் டிக்குகள் ஆகியோருக்கு எதிராக அவர் தொடங்கிய
’உல்குலான்’ என்ற கலகத்தில் அவர்கள் பெருந்திரளாக அணிதிரண்டனர்.
மக்கள் குத்தகை எதையும் கொடுக்க வேண்டாம் என்று கூறிய பிர்சா,
நிலப்பிரபுத்துவ, மதப்பிரச்சார, காலனியாதிக்க பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின்
முகாம்களின் மீது தாக்குதலையும் மேற்கொண்டார். தங்களது
பாரம்பரியமான வில்- அம்பு ஆகியவற்றுடன் மத்திய, கிழக்கு இந்தியாவைச்
சேர்ந்த பழங்குடிகள் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக மிக வலுவானதொரு
ஆயுதந்தாங்கிய எதிர்ப்பை மேற்கொண்டனர். இத்தகைய நடவடிக்கையை
மேற்கொண்ட அதேநேரத்தில், உண்மையான சுரண்டல்காரர்கள் மீது மட்டுமே
தாக்குதல் நடத்துவதையும், சாதாரண மக்களுக்கு இடையூறு எதையும்
மேற்கொள்ளாமல் இருப்பதையும் பிர்சா மிகுந்த கவனத்தோடு
உறுதிப்படுத்தினார். இவ்வகையில் இப்பகுதி மக்களிடையே
உயிர்த்துடிப்பிற்கும் தெய்வீகத் தன்மைக்குமான ஓர் அடையாளமாக பிர்சா
மாறினார். எனினும் மிக விரைவிலேயே அவர் பிரிட்டிஷ் காவலர்களால்
பிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையிலேயே அவர் 1900
ஜனவரி 9 அன்று உயிர்நீத்தார். எனினும் பகவான் பிர்சா முண்டாவின்
உயிர்த்துடிப்பு மிக்க போராட்டம் வீணாகவில்லை. பழங்குடிகளின் மோசமான
நிலை குறித்தும், அவர்கள் மீது நடத்தப்படும் குரூரமான சுரண்டல் குறித்தும்
பிரிட்டிஷ் ஆட்சி உணர வேண்டிய கட்டாயத்தையும் அவரது போராட்டம்
ஏற்படுத்தியது. இதன் விளைவாகவே, பழங்குடிகளைப் பாதுகாக்கும்
வகையில் ‘1908ஆம் ஆண்டின் சோட்டா நாக்பூர் குத்தகை சட்டம்’ பிரிட்டிஷ்
அரசால் கொண்டு வரப்பட்டது. மிக முக்கியமான இந்த சட்டம்
பழங்குடிகளின் நிலத்தை பழங்குடியல்லாத பிரிவினருக்கு கைமாற்றுவதை
தடை செய்ததோடு, பழங்குடியினருக்கு மிகப்பெரும் நிவாரணத்தையும்
கொண்டு வந்தது. இதன் மூலம் பழங்குடியினரது உரிமைகளைப் பாதுகாக்கும்
தனிச்சிறப்புமிக்கதொரு சட்டமாகவும் அது மாறியது அதைப் போன்றே
கட்டாய உழைப்பு முறையை முற்றிலுமாக அகற்றுவதற்கும் பிரிட்டிஷ் ஆட்சி
நடவடிக்கைகளை மேற்கொண்டது.
அவர் மறைந்து 121 ஆண்டுகள் கழிந்த பின்பும் கூட பகவான் பிர்சா முண்டா
இன்றும் தொடர்ந்து லட்சோப லட்சக் கணக்கான இந்தியர்களுக்கு
உத்வேகமூட்டுபவராகவே இருந்து வருகிறார். வீரம், துணிவு, தலைமைத்
திறன் ஆகியவற்றுக்கான அடையாளமாகவும் அவர் திகழ்கிறார். தனது
செறிவான கலாச்சாரம், மகத்தான பாரம்பரியம் ஆகியவை குறித்து மிகுந்த
பெருமிதம் கொள்ளும் தலைவராக விளங்கியதோடு, அதே நேரத்தில்
தேவைப்படுமேயானால் தனது சொந்த நம்பிக்கைகளை சீர்திருத்திக்
கொள்ளவும் அவர் தயங்கியதில்லை.
நமது விடுதலை இயக்கத்தின் மிகப் பெரும் அடையாளங்களில் ஒருவராக
பகவான் பிர்சா முண்டா திகழ்கிறார். பல்வேறு பழங்குடி இனத்தவரும்
இந்தியாவின் விடுதலைக்கான போராட்டத்தை வலுப்படுத்தியுள்ளனர்.
முண்டா, ஒரோன், சந்தால், தமார், கோல், பில், காசி, கோயா,
மிசோஸ்டோ ஆகிய பழங்குடிகள் அவற்றுள் ஒரு சிலவாகும். நமது பழங்குடி
இனத்தவர் மேற்கொண்ட புரட்சிகர இயக்கங்களும் போராட்டங்களும்
அவர்களது மிகப்பெரும் துணிவை, மாபெரும் தியாகத்தை எடுத்துக்
காட்டுவதாக அமைவதோடு, நாடு முழுவதிலும் உள்ள இந்தியர்களுக்கு
உத்வேகம ஊட்டுவதாகவும் அமைந்துள்ளன. எனினும், ஏதோ சில
காரணங்களால், நமது புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர்கள் இந்தியாவின்
விடுதலைப் போராட்டத்தில் இந்தப் பழங்குடிகளின் மகத்தான பங்களிப்பிற்கு
முறையான இடமளிக்கவில்லை.
எனினும் விடுதலைப் போராட்டத்தின் மாமணிகளைப் போற்றும் மாபெரும்
திருவிழாவினை கொண்டாட வேண்டுமென நமது தொலைநோக்கு மிக்க
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அனைத்து இந்தியர்களையும் கேட்டுக்
கொண்டுள்ளதோடு, இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற
போதிலும் உரிய இடம்பெறாத வீரர்களின் துணிவையும் தியாகத்தையும்
ஆய்வு செய்யவும் புரிந்து கொள்ளவும் வேண்டும் எனவும் கேட்டுக்
கொண்டுள்ளார். அவரது திறமைமிக்க தலைமையின்கீழ், பகவான் பிர்சா
முண்டாவின் பிறந்த தினமான நவம்பர் 15 அன்று ஒவ்வொரு ஆண்டும்
பழங்குடி மக்கள் இனப் பெருமையை கொண்டாடும் விழாவினை
கொண்டாடுவதன் மூலம் முதன்முறையாக பழங்குடியினரின் பெருமையும்
பங்களிப்பும் முறையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
பழங்குடி மக்களின் இனப் பெருமைக்கான இந்த விழா நாளில் துணிவு,
விருந்தோம்பல், தேசியப் பெருமிதம் ஆகிய இந்திய மதிப்பீடுகளை
வளர்த்தெடுப்பதிலும் அதன் கலாச்சாரப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதிலும்
இந்தியாவின் பழங்குடி மக்கள் எடுத்து வந்துள்ள முயற்சிகளை அங்கீகரித்து
நாம் நினைவு கூர்வோமாக!
எழுதியவர்:
டாக்டர். எல். முருகன்
இணையமைச்சர்,
தகவல் ஒலிபரப்பு மற்றும்
மீன்வளம், கால்நடை வளர்ப்பு, பால்பண்ணை துறைகள்