வெள்ள பாதிப்பு ஏற்படாத வகையில் அரசு தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்- ராமதாஸ் வலியுறுத்தல்

Loading

சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அடுத்த சில நாட்களில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தென் மாவட்டங்களில் தற்போது பெய்து வரும் மழையால் அங்கு ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் அதன் விளைவுகளை வைத்து பார்க்கும் போது, அதே போன்ற நிலைமை சென்னை உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற அச்சமும், கவலையும் மக்களிடம் ஏற்பட்டுள்ளது. இதை மனதில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். வடகிழக்கு பருவமழை எந்த நேரமும் தொடங்கலாம் என்ற நிலையில் சென்னையிலும், பிற மாவட்டங்களிலும் பணிகள் இன்னும் முழுமையடையவில்லை. பல மாவட்டங்களில் மழைநீர் கால்வாய்களைத் தூர்வாரும் பணிகள் சரியாக செய்யப்படவில்லை. இவை வெள்ள ஆபத்துகளை அதிகரித்து விடும்.

சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கும், மற்ற நீர் நிலைகளுக்கும் கண்காணிப்பு பொறியாளர் நிலையிலான அதிகாரிகள் தலைமையில் குழுக்களை அமைத்து நிலைமையை கண்காணிக்க ஆணையிட வேண்டும். சூழலுக்கு ஏற்பட முடிவெடுக்கும் அதிகாரமும் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

வெள்ளத்தை தவிர்ப்பதற்கு தேவையான மற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழையால் வெள்ள பாதிப்பும், பிற பாதிப்புகளும் ஏற்படாத வகையில் அரசு தடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *