திருவள்ளூர் அடுத்த புட்லூரில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோயிலில் ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு பெண்கள் கூட்டம் : கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நடத்தி வேண்டுதலை நிறைவேற்றினர்
திருவள்ளூர் ஜூலை 24 : தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கோவில்களில் தரிசனத்திற்கு மட்டும் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளது. விழாக்கள் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா தொற்று படிப்படியாக குறைக்க தமிழக அரசு பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு ஜூன் மாதத்திற்கு பிறகு அனைத்து மத கோவில்களும் வழிபட அனுமதி அளித்தது. ஆடி மாதம் பிறந்ததையொட்டி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் பெண்கள் சிறப்பு வழிபாடு செய்வது வழக்கம்.
இந்நிலையில் திருவள்ளூர் அடுத்த புட்லூரில் உள்ள அங்காள பரமேஸ்வரி திருக்கோயிலில் ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை என்பதால் கூட்டம் அலைமோதியது. இத்திருக்கோயிலில் திருமணமான பெண்கள் அடியெடுத்து வைத்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பதும் சுகப் பிரசவம் வரம் வேண்டி கர்ப்பிணிகளுக்கு சுகப் பிரசவம் ஏற்படும், குடும்ப பிரச்னைகள் தீர வேண்டும் என வேண்டிக் கொண்டால் அங்காள பரமேஸ்வரி தீர்த்து வைப்பாள் என்பது ஐதீகம் என்பதால் பெண்கள் கூட்டம் அலைமோதியது.
கோயிலுக்குள் விழாக்கள் நடத்தக் கூடாது என்பதால் கர்ப்பிணி தாய்மார்களுக்கு தங்களது வேண்டுதலை நிறைவேற்ற 50 க்கும் மேற்பட்ட பெண்களுக்கு கோவில் அருகே சாலையில் வளைகாப்பு நடத்தி,பொங்கல் வைத்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர்.இருப்பினும் திருவள்ளூர் மாவட்டத்தில் தொற்று பாதிப்பு குறைந்துள்ள நிலையில் சமூக பாதுகாப்பை கடைபிடிக்காமல் கூட்டம் கூடியதால் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.