தண்ணீருக்காக 5 கிலோமீட்டர் செல்லும் உருவாட்டி கிராம மக்கள்.
தேவகோட்டை ஜூலை 21
தேவகோட்டை அருகே உருவாட்டி கொங்கந்திடல் கிராமத்தில் குடிநீர் வசதி இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வட்டம் உருவாட்டி கொங்கந்திடல் கிராமத்திற்கு குடிநீர் வசதி இல்லாமல் மக்கள் மிகவும் சிரமப்பட்டுவருகின்றனர்.
இது குறித்து ஊராட்சி மன்றத் தலைவரிடம் பலமுறை கூறியும்
அவர் இதுவரை அதற்கான எந்த முயற்சியும் மேற்கொள்ளாமல் இருப்பதாக புகார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் தங்களின் தண்ணீர் தேவைகளுக்காக ஐந்து கிலோ மீட்டர் நடந்து சென்று வாய்க்காலில் இருக்கும் தண்ணீரை எடுத்து குடிப்பதற்கும் சமைப்பதற்கும் பயன்படுத்தி வருகின்றனர்.
கலங்கிய குட்டை தண்ணீரை குடிப்பதனாலும், சமையலுக்கும் பயன்படுத்துவதனாலும் மக்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்பட்டு அவதிப்பட்டு வருகின்றனர்.
தங்கள் ஊர் மாவட்டத்தின் கடைக்கோடி கிராமமாக இருப்பதால் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியவில்லையோ என்றும் இதன் பிறகாவது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து தங்கள் கிராமத்தின் தண்ணீர்த் தேவையை நிறைவேற்றித்தரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.