காரைக்குடி அருகே தொடர்வண்டி மோதியதில் எட்டு மாடுகள் உயிரிழப்பு
காரைக்குடி ஜூலை 14
காரைக்குடி பொன்நகர் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற மாடுகள்மீது தொடர்வண்டி மோதியதில் எட்டு மாடுகள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தன.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு திருச்சியிலிருந்து சோதனை ஓட்டமாக தொடர்வண்டி ஒன்று இயக்கிப்பார்க்கப்பட்டது.
காரைக்குடி அருகில் பொன்நகர் அருகே தொடர்வண்டி வந்தபொழுது அந்தப் பகுதியில் மேய்ந்துகொண்டிருந்த மாடுகள் தண்டவாளத்தை கடக்க முயன்றன.
தண்டவாளத்தின் குறுக்கே திடீரென்று மாடுகள் புகுந்ததால் ஓட்டுநரால் தொடர்வண்டியை உடனடியாக நிறுத்த முடியவில்லை.
இதனால் தண்டவாளத்தை கடக்க முயன்ற 8 மாடுகளும் அடுத்தடுத்து தொடர்வண்டியில் மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தன.
ஒரே சமயத்தில் 8 மாடுகள் உயிரிழந்த நிகழ்வு
அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இவ்விபத்து குறித்து காரைக்குடி இரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.