ஏடிஎம் மையங்களில் நூதன முறையில் பணத்தை திருடிய வழக்கில்முக்கிய குற்றவாளி சௌகத் அலி என்பவர் ஹரியானாவில் கைது.

Loading

சென்னையில் பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் மையங்களில்
நூதன முறையில் பணத்தை திருடிய வழக்கில் 3 குற்றவாளிகள்
கைது செய்யப்பட்டுள்ள நிலையில், முக்கிய குற்றவாளி சௌகத்
அலி என்பவர் ஹரியானாவில் கைது.

கடந்த 15.6.2021 முதல் 18.6.2021 வரையில் சென்னை பெருநகரில் உள்ள பாரத
ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் மையங்களில் சிலர் பணம் எடுப்பது போல சென்று ஏடிஎம்
இயந்திரத்தில் இருந்து நூதன முறையில் சுமார் ரூ.45 லட்சம் பணத்தை திருடியுள்ளனர்.
இது தொடர்பாக, இதுவரை 15 வழக்குகள் பதிவு செய்து விசாரணை
மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், மேற்படி குற்றவாளிகள், தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3
இடங்களிலும், காஞ்சிபுரம், திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டங்களில் தலா 1
இடங்களிலும் இதே போன்று நூதன கொள்ளையில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது.
மேற்படி நூதன கொள்ளையில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள்
உத்தரவிட்டதின்பேரில், கூடுதல் ஆணையாளர் (தெற்கு) அவர்களின் தலைமையில், பல
குழுக்களாக தனிப்படையினர் நியமிக்கப்பட்டு, இணை ஆணையாளர் (தெற்கு
மண்டலம்), துணை ஆணையாளர்கள் தியாகராய நகர் மற்றும் கீழ்பாக்கம் அவர்களின்
வழிநடத்துதலுடன், உதவி ஆணையாளர்கள், ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள்
கொண்ட பல்வேறு விசாரணைக் குழுக்களாக நியமனம் செய்யப்பட்டு, விசாரணையில்
ஈடுபட்டுள்ளனர்.

தனிப்படையினர் சம்பவ இடங்களில் பொருத்தியிருந்த கண்காணிப்பு கேமரா
பதிவுகளில் கிடைத்த காட்சிகளை கொண்டு தீவிர ஆய்வு மற்றும் விசாரணை
செய்ததில், வடமாநிலத்தைச் சேர்ந்த நபர்கள் மேற்படி திருட்டில் ஈடுபட்டதும், பின்னர்
ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த 9-க்கும் மேற்பட்ட நபர்கள் ஒருங்கிணைந்து,
மேற்கண்ட குற்றங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
அதன்பேரில், தனிப்படையினர் ஹரியானா மாநிலம் சென்று ஹரியானா மாநில
காவல் துறையினருடன் ஒருங்கிணைந்து தேடுதல் வேட்டை நடத்தி, இவ்வழக்கில்
தொடர்புடைய அம்மாநிலத்தைச் சேர்ந்த அமீர் அர்ஷ், வ/23, த/பெ.அலிமுதீன்
என்பவரை 23.6.2021 அன்றும், வீரேந்திர ராவத், வ/23, த/பெ.தயா சந்த், என்பவரை
27.6.2021 அன்றும், நஜிம் உசேன் என்பவரை, 29.6.2021 அன்றும் கைது செய்து,
ஹரியானா மாநில நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சென்னைக்கு அழைத்து வந்து,
விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தினர்.

மேலும், தனிப்படையினர் தீவிர விசாரணை செய்ததில், 9-க்கும் மேற்பட்ட
ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த நபர்கள் பல குழுக்களாக செயல்பட்டு, மேற்படி
கொள்ளையில் ஈடுபட்டதும், அதில் ஒரு குழுவின் தலைவனாக செயல்பட்டவனின்
முகாந்திரம் தெரியவந்தது. அதன்பேரில், தனிப்படையினர் ஹரியானா மாநிலத்தில்
தீவிர விசாரணை மற்றும் தேடுதலில் ஈடுபட்டு, அம்மாநில காவல்துறையினருடன்
ஒருங்கிணைந்து, மேற்படி கொள்ளையில் தொடர்புடைய சௌகத் அலி, வ/27,
த/பெ.அப்துல் கபூர், காகுஸ் கிராமம், நஹ் மாவட்டம், அரியானா மாநிலம் என்பவரை
கைது செய்து, ஹரியானா மாநில நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சட்ட
நடவடிக்கைகளுக்கு பின்னர் குற்றவாளியை நேற்று (02.7.2021) இரவு சென்னைக்கு
அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் குற்றவாளி சௌகத்
அலி மேற்படி எஸ்.பி.ஐ., ஏடிஎம் நூதன கொள்ளையின் ஒரு குழுவுக்கு தலைமையாக
செயல்பட்டு, குற்றத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

விசாரணைக்குப் பின்னர் எதிரி சௌகத் அலி இன்று (03.7.2021) நீதிமன்றத்தில்
ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.
மேற்படி ஏடிஎம் நூதன கொள்ளை வழக்கில் இதுவரையில் 4 குற்றவாளிகள் கைது
செய்யப்பட்டுள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை கைது செய்ய
தனிப்படையினர் தீவிர தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *