திருமழிசையில் ஓசியில் பிரியாணி தராததால் ஆத்திரம் : ஹோட்டல், வீடு மீது பெட்ரோல் குண்டு வீசிய முக்கிய குற்றவாளி கைது :
திருவள்ளூர் 30 : திருவள்ளூர் அடுத்த திருமழிசையை சேர்ந்தவர்கள் அருணாச்சல பாண்டியன், மகாராஜன், கணேசன். இவர்கள் 3 பேரும் திருமழி சை மெயின் ரோட்டில் கஸ்தூரி பவன் என்கிற ஹோட்டலை நடத்தி வருகின்றனர்.இந்த நிலையில் கடந்த 18 ஆம் தேதி மோட்டார் சைக்கில்களில் வந்த நபர்கள் எங்கள் அண்ணன் எபி என்பவர் ஓசியில் பிரியாணி வாங்கி வருமாறு கூறியதாக தெரிவித்துள்ளனர்.
அதற்கு அருணாச்சல பாண்டியன் பிரியாணி தீர்ந்து விட்டதாக தெரிவித்துள்ளார். அண்ணன் எபி கேட்டும் பிரியாணி இல்லை என்று கூறுகிறாயா என்று மிரட்டிவிட்டு, உன்னுடைய செல்போன் எண்ணை கொடு எங்கள் அண்ணனையே உன்னிடம் பேச சொல்கிறோம் என்று கூறி தகராறு செய்துவிட்டு புறப்பட்டுச் சென்று விட்டனர்.
இதனையடுத்து மீண்டும் மாலை 4 மணியளவில் மோட்டார் சைக்கிள்களில் திரும்பி வந்த 8 நபர்கள் கஸ்தூரி பவன் ஹோட்டலுக்கு வெளியே நின்று கொண்டு ஹோட்டல் மீதும், சிறிது தூரத்தில் உள்ள அருணாச்சல பாண்டியன் வீட்டின் மீதும் பெட்ரோல் குண்டுகளை எடுத்து வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவம் குறித்து அருணாச்சல பாண்டியன் என்பவர் திருமழிசையைச் சேர்ந்த எபி என்கிற எபினேசர் மற்றும் 8 பேர் மீது வெள்ளவேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
திருவள்ளூர் எஸ்பி அரவிந்தன் உத்தரவின்பேரில் திருவள்ளூர் டிஎஸ்பி துரைபாண்டியன் தலைமையில் வெள்ளவேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷோபா தேவி, சப் இன்ஸ்பெக்டர் தீபன்ராஜ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து சதீஷ் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் சதீஷ் செல்போனிலிருந்து தான் அருணாச்சல பாண்டியன் செல்போனுக்கு எபி தொடர்புகொண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.
பின்னர் அவரை பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக இருந்த சதீஸ் ,வேலன்,திருப்பதி,கிறிஸ்டோபர்,பழனி, பரத்ராஜ் ஆகிய 6 பேரையும் கைது செய்து பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
மேலும் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான எபினேசரை வெள்ளவேடு இன்ஸ்பெக்டர் சோபா மற்றும் போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில் பாதிரிவேடு அருகே வயல்வெளியில் மறைந்திருந்த எபினேசரை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். பிறகு அவரை பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்