சேலம் மாவட்டத்தில் 100சதவிகித வாக்குப்பதிவிற்கான விழிப்புணர்வை வாக்காளர்களுக்கு ஏற்படுத்தும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அதிநவீன மின்னணு வீடியோ வாகனம்: மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான ராமன் கொடியசைத்து துவக்கி வைத்தார்:
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் 100 சதவிகித வாக்குப்பதிவுக் கான விழிப்புணர்வை, வாக்காளர்களுக்கு ஏற்படுத்திடும் வகையில், சேலம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறையின், அதிநவீன மின்னணு வீடியோ வாகனத்தினை, மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான ராமன் கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021 அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையத்தால் வாக்காளர்களுக்கு வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், வாக்காளர்கள் தேர்தலின் போது தங்கள் வாக்குரிமையை கட்டாயம் செலுத்தும் பொருட்டு 100 சதவிகித வாக்கு பதிவினை வாக்காளர்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மாவட்ட தேர்தல் அலுவலகம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில்,சேலம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறையின் அதிநவீன மின்னணு வீடியோ வாகனத்தின் மூலம் சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் வாக்காளர்கள் வாக்களிப்பதன் அவசியம் குறித்தும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி,அனைத்து வாக்காளர்களும் 100 சதவிகிதம் வாக்களிக்கும் வகையிலும், இளம் வாக்காளர்கள் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்காகவும்மேலும் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் வாக்களிக்கும் வகையிலும், வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம்? என்பதை உறுதி செய்யும் கருவியின் செயல்பாடுகள் குறித்தும்,மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்,இந்திய தேர்தல் ஆணையத்தால் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ள தேர்தல் விழிப்புணர்வு வீடியோ படக் காட்சிகள் நடத்தப்படுகின்றன.
அதிநவீன மின்னணு வீடியோ வாகனம் கொடியசைத்து துவக்கி வைக்கப் பட்டு, சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாள்தோறும் விளம்பர வீடியோ வாகனத்தின் மூலம், விழிப்புணர்வு குறும் படங்கள் திரையிடப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ராமன் தெரிவித்தார்.
பின்னர்,சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள செய்தி மக்கள் தொடர்புத் துறையில் அமைக்கப்பட்டுள்ள ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு மையம்,ஊடக மையம் மற்றும் ஊடக கண்காணிப்பு மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ராமன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தமிழரசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்கள்) தியாகராஜன், மாநகராட்சி உதவி ஆணையர் (அஸ்தம்பட்டி) சரவணன், ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழுவின் உறுப்பினர் /பொறுப்பு அலுவலர்/ செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை, தனி வட்டாட்சியர் (தேர்தல்கள்) சிராஜுதீன், உறுப்பினர்,ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழு உதவி பொறுப்பு அலுவலர் /வட்டாட்சியர் (இலங்கை அகதிகள் மறுவாழ்வு) முருகேசன், ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழுவின் உறுப்பினர் உதவி பொறுப்பு அலுவலர் /உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) மோகன்ராஜ் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.