சேலத்தில் சர்வதேச தரத்திலான ஆசியாவிலேயே மிகப் பிரமாண்டமான கால்நடைத் பூங்கா மற்றும் ஆராய்ச்சி நிலையம்: நாளை கால்நடை மருத்துவக்கல்லூரியை திறந்து வைத்து மாணவர் சேர்க்கைக்கான ஆணையை வழங்க உள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி:
சேலம் மாவட்டம் தலைவாசல் கூட்ரோட்டில், ஆசியாவிலேயே மிகப் பிரமாண்டமாக சர்வதேச தரத்தில் அமையவுள்ள ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா மற்றும் விலங்கின ஆராய்ச்சி நிலையத்தில், புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய கட்டிடங்களை,நாளை 22ம் தேதி திங்கட்கிழமை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் திறந்து வைக்கவுள்ளார்.அத்துடன் மாணவர் சேர்க்கைக்கான ஆணையையும் வழங்க உள்ளார். முன்னதாக தமிழக கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நேரில் வருகை புரிந்து, சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் அவர்களுடன் நடைபெற்று வரும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். தமிழகத்தில் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ், ஏற்கனவே சென்னை, நாமக்கல், ஒரத்தநாடு (தஞ்சாவூர்), நெல்லை ஆகிய 4 இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இந்த ஒரே ஆண்டில் ஐந்தாவதாக, சேலம் மாவட்டம் தலைவாசல் கூட்ரோட்டில் அமையவுள்ளது இந்த கல்லூரி.
ஆறாவதாக தேனிலும், ஏழாவது கால்நடை மருத்துவக்கல்லூரி உடுமலைப்பேட்டையில் உருவாக்கப்பட்டுள்ளன.
சேலத்தில் தொடங்கப்பட்டுள்ள இந்த கால்நடை மருத்துவக் கல்லூரி ஆனது கடந்த 2020 பிப்ரவரி மாதம் ஒன்பதாம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களால் அடிக்கல் நாட்டி பணிகள் துவங்கப்பட்டது. கடந்த ஒரு ஆண்டில் இந்த கால்நடை ஆராய்ச்சி மருத்துவ கல்லூரி 3 லட்சத்து 75 ஆயிரத்து 583 சதுர அடி பரப்பில் பிரமாண்டமான 20 கட்டிட பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
அவைகள் நிர்வாக அலுவலக கட்டிடம், கல்விசார் வளாகம், நூலக கட்டிடம், மாணவ, மாணவியர் தங்கும் விடுதி மற்றும் இறைச்சி அறிவியல், பால் அறிவியல், கால்நடை பண்ணை வளாகம், கல்லூரி முதல்வர் குடியிருப்பு, 2 விடுதி காப்பாளர் குடியிருப்பு, விருந்தினர் மாளிகை, உணவகம், கால்நடை மருத்துவமனை என தனித்தனியாக அத்துணை பணிகளுக்கும் 3 லட்சத்து 75 ஆயிரத்து 583 சதுர அடி பரப்பில் கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் கால்நடை மருத்துவக் கல்லூரியுடன் சேர்த்து ஆராய்ச்சி நிலையம் அமையப் பெற, இங்கேயே, சுமார் 565 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு, அதற்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த ஆராய்ச்சி மையத்தில்,கால்நடை பண்ணை வளாகம், பால் பதப்படுத்துதல் மற்றும் தயாரிப்பு உற்பத்தி வளாகம், மீன்வள வளாகம் அதே போன்று கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் முதுகலைப் படிப்பு வளாகம், நீட்டிப்பு மற்றும் திறன் மேம்பாட்டு ஆராய்ச்சி வளாகம் மற்றும் வணிக அடைகாக்கும் மற்றும் தடையற்ற ஒருங்கிணைந்த வளாகம், இறைச்சி உற்பத்தி செய்து அதை விற்பனை செய்வதற்கான வளாகம்,தீவன ஆராய்ச்சி மண்டலம், பொதுத் தொடர்பு மண்டலம் மற்றும் பொதுவான வசதிகளின் கீழ் நிர்வாக அலுவலகங்கள் மற்றும் குடியிருப்பு வசதிகள் ஆகிய பணிகளுடன், நுழைவுவாயில் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
மேலும், இந்த கால்நடை பூங்காவிற்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என்பதற்காகவே காவிரி ஆற்றில் பூலாம்பட்டி கூடக்கல் காட்டுவளவு என்ற இடத்தில் குடிநீருக்காக கிணறு அமைக்கப்பட்டு, அங்கிருந்து நீர் உந்தப்பட்டு, சித்தூர் பகுதியில் குடி நீர் சுத்திகரிக்கப்பட்டு, நீர் வரவிருக்கின்றது. இதற்காக, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் சுமார் 262 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதன் மூலம் கால்நடை பூங்கா வளாகத்தில் 25 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளும், 10 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளும் கட்டப்பட்டு வருகின்றன. இந்த கால்நடை ஆராய்ச்சி நிலையமானது முழுமையாக செயல்பாட்டிற்கு வரும் தருணத்தில், இந்தியாவிலேயே முதன்மையான கால்நடை ஆராய்ச்சி படிப்பு நிலையமாக திகழும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.அத்துடன் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் இங்கு கல்வி கற்க வருகைபுரிவார்கள்.
அது மட்டுமல்லாமல் ஏற்கனவே, கால்நடை பராமரிப்பு துறையில் தமிழகம் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த கால்நடை ஆராய்ச்சி நிலையம் சேலத்தில் அமையப்பெற்றது மிகப்பெரிய வரம் என்றால் அது மிகையாகாது.இதன் மூலம் மாவட்டத்தில் உள்ள மாணவர்கள் வெளியூர் சென்று கால்நடை மருத்துவம் படித்துவந்த நிலைமாறி, சொந்த மாவட்டத்திலேயே சர்வதேச தரத்திலான கல்வி கற்கும் வாய்ப்பு உருவாகி உள்ளது. அத்துடன் மாணவர்கள் ஆராய்ச்சிக்கான மேற்படிப்பையும் இங்கேயே தொடர்ந்து படிக்கலாம்.அதுமட்டுமல்லாமல்,விவசாய பெருங்குடி மக்கள், தங்கள் கால்நடை தொழிலை மேம்படுத்த இந்த ஆராய்ச்சி நிலையத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்.தங்கள் கால்நடைகளுக்கு சிறந்த முறையில் மருத்துவம் பார்க்க ஏதுவாக அமையும்.தமிழக முதல்வரின் சீரிய முயற்சியினால் ஆசியாவிலேயே மிக பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்த கால்நடை பூங்கா ஆராய்ச்சி நிலையம் மற்றும் மருத்துவக்கல்லூரி உலக அளவில் தலை சிறந்து விளங்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.