கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக 2 ஜிபி டேட்டா வழங்கும் திட்டம்: முதல்வர் பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்.

Loading

கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக 2 ஜிபி டேட்டா வழங்கும் திட்டத்தை இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.

கொரோனா பரவல் அச்சம் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் கடந்த 10 மாதங்களாக மூடப்பட்டு உள்ளன. இதனால் ஆன்லைன் மூலம் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கல்வி கற்று வருகிறார்கள்.

தற்போது தமிழகத்தில் கொரோனா பரவல் சற்று குறைந்துள்ளதால் கல்லூரியில் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் தொடங்கப்பட்டது. பொதுத் தேர்வுக்கு தயாராகும் வகையில் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரிகளில் தமிழக சுகாதாரத்துறையின் கொரோனா வழிகாட்டுதல்கள் முறையாக பின்பற்றபட்டு வருகிறது. மாணவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.

இந்நிலையில் வகுப்புகள் துவங்கப்படாத இதர மாணவர்கள் ஆன்லைன் வழி கற்றலை தொடரும் வகையில், ஏப்ரல் மாதம் வரை நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா இலவசமாக வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது.

இதனையொட்டி, ஏப்ரல் 2021 வரை 4 மாதங்களுக்கு எல்காட் நிறுவனம் மூலமாக இணையவழியில் கல்விகற்கும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தினசரி 2ஜிபி டேட்டா இலவசமாக வழங்கும் திட்டத்தை இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.

அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள்,பாலிடெக்னிக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசின் இலவச டேட்டா கார்டு வழங்கப்படவுள்ளது. இணைய வழி வகுப்புகளில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்க ஏதுவாக 2 ஜிபி டேட்டா இலவசமாக வழங்கப்படுகிறது. 9 லட்சத்து 69 ஆயிரத்து 47 மாணவர்களுக்கு ஏப்ரல் மாதம் வரை நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *