அனைத்து பணியாளர்கள் சங்கம் போராட்டம்

Loading

திருவள்ளூரில் மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்க அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் :

திருவள்ளூர் ஜன 12 : திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி சாலை முன்பு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்க அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மாநில செயற்குழு உறுப்பினர் டி.சீனிவாசன் தலைமை தாங்கினார்.சங்கத்தைச் சேர்ந்த வனிதா, திலகவதி, சங்கர், ஜெயகீதா, சித்ரா மற்றும் அபிராமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

போராட்டத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தின் மாநில தலைவர் எஸ்.காந்திமதிநாதன் கோரிக்கைகள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்து உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி வைத்தனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட மகளிர் நிர்வாகி க.வெண்ணிலா, மாவட்ட துணைத் தலைவர் ஏ.நாகராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மேலும், மாவட்ட தலைவர் எசேக்கியேல் ஏகாம்பரம், முன்னாள் புதுவாழ்வு திட்ட பணியாளர் சங்க மாநில தலைவர் ஆர்.தமிழரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது, தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்க பணியாளர்களுக்கு அடிப்படை ஊதிய உயர்வு வழங்க வேண்டும். பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் மாவட்ட அலுவலகத்தில் இருந்து பணியாளர்களின் நேரடி வங்கி கணக்கிற்கு விடுவிக்க வேண்டும். ஆண்டுதோறும் பணி புதுப்பித்தல் முறையை கைவிட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வரும் பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு, பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார பணியாளர்களுக்கு பணிமதிப்பீடு அடிப்படையில் ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.

பணியாளர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு வருங்கால வைப்பு நிதி, காப்பீடு மற்றும் உயிரிழந்த பணியாளர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும். நகர்ப்புற பணியாளர்களுக்கு பயணப்படி வழங்க வேண்டும். பெண் பணியாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு ஊதியத்துடன் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இறுதியில் ஹோமேஸ்வரன் நன்றி கூறினார்.
0Shares