சமையல் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
![]()
திருவள்ளூர் டிச 11 : திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் செய்ய ஏற்கனவே விளம்பரம் செய்யப்பட்டு நேர்காணலில் வருகை புரியாத மற்றும் பணி வேண்டாம் என தெரிவித்த சத்துணவு மையங்களில் மீண்டும் நேர்காணல் நடத்தப்பட உள்ளது. பூவிருந்தவல்லி ஊராட்சி ஒன்றியத்தில் காலிப்பணியிட எண்ணிக்கை 7,வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் காலிப்பணியிட எண்ணிக்கை 3,கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் காலிப்பணியிட எண்ணிக்கை 1.விண்ணப்பங்களை அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பெற்று கொள்ளவும் அல்லது www.tiruvallur.nic.in
விண்ணப்பதாரர் 10-ம் வகுப்பு தோல்வி / தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கு 21 வயது பூர்த்தியடைந்தும் 40 வயதிற்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும். பழங்குடியினருக்கு 18 வயது பூர்த்தியடைந்தும் 40 வயதிற்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும். விதவைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்டோர் 20 வயது பூர்த்தியடைந்தும் 40 வயது மிகாதவராகவும் இருக்க வேண்டும்.
மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களுக்கு 4% ஒதுக்கீடு, உரிய அடையாள அட்டையுடன் விண்ணப்பிக்க வேண்டும், குறைவான பார்வைத் திறன் (மூக்குக் கண்ணாடி மூலம் சரி செய்யப்பட்டது) உடல் இயக்க குறைபாடு (ஒரு கால்), குணப்படுத்தப்பட்ட தொழுநோய், (40% கைகளின் முழு செயல்பாட்டுதிறன், உணர்திறன் மற்றும் செயல்திறன் உள்ளடங்கியது), திரவ வீச்சினால் பாதிக்கப்பட்டவர்கள், குறிப்பிட்ட கற்றல் திறன் குறைபாடு (மிதமான) இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் மையத்திற்கும் விண்ணப்பதாரரின் குடியிருப்பிற்கும் இடைப்பட்ட தூரம் 3 கி.மீ–குள் இருக்க வேண்டும். (ஊராட்சி – குக்கிராமம்- வருவாய் கிராமம் போன்றவைகள் கணக்கில் எடுத்துக் கொள்ள தேவையில்லை) விதவை, கணவரால் கைவிடப்பட்டோர் ஆகியோருக்கு 25% இட ஒதுக்கீடு இதில் பொருந்தும்.
விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களில் 11.12.2025 முதல் 22.12.2025 தேதி வரை மாலை 5.45 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் பள்ளி மாற்றுச்சான்றிதழ், பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், குடும்ப அட்டை, இருப்பிடச் சான்று, ஆதார் அட்டை, சாதிச் சான்று போன்றவற்றின் நகல் இணைக்கப்பட வேண்டும். நேர்முகத்தேர்வின் போது அசல் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.

