மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மருத்துவ முகாம்
![]()
நீலகிரி
நீலகிரி மாவட்டம், உதகை அரசு மேல்நிலைப்பள்ளியில், பள்ளிக்கல்வித்துறை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வட்டார வள மையம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இணைந்து நடத்திய 0-18 வயதுடைய மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாமினை, மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு அவர்கள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து பார்வையிட்டார்.
இம்முகாமில், உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவ குழு நிபுணர்கள் கலந்து கொண்டு மாணவர்களை மதிப்பீடு செய்து மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கு மருத்துவ சான்றிதழ்கள், தேசிய அடையாள அட்டை பதிவு மற்றும் புதுப்பித்தல், தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டைக்கான பதிவு மற்றும் ஆலோசனைகள், இலவச ரயில் மற்றும் பேருந்து பயணச்சலுகை, உதவி உபகரணங்களுக்கான பதிவு உதவித்தொகைக்கான பதிவு, குழந்தைகள் நல மருத்துவர் ஆலோசனை, எலும்பு மூட்டு மருத்துவர் ஆலோசனை, காது, மூக்கு தொண்டை மருத்துவர் ஆலோசனை, கண் மருத்துவர் ஆலோசனை, அன்னப்பிளவு அறுவை சிகிச்சைக்கான ஆலோசனை, முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சைக்கான பதிவு ஆகியவை குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டது.
இம்முகாமில் 0 முதல் 18 வயது வரை உள்ள சுமார் 72 மாற்றுத்திறன் கொண்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் 12 மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டைகளும், 7 மாணவர்களுக்கு உதவி உபகரணங்களுக்கான மருத்துவ அறிவுரைகளும் வழங்கப்பட்டன.
இம்முகாமில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருநாவுகரசு, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் குப்புராஜ், உதவி திட்ட அலுவலர் (ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வட்டார வள மையம்) அர்ஜூணன், அரசுத்துறை அலுவலர்கள், மருத்துவர்கள், மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

