கிராம சபை கூட்டம் ஆட்சியர் மு.பிரதாப் தகவல்
![]()
திருவள்ளூர் மாவட்ட கிராம ஊராட்சிகளில் உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு வரும் 1 ம் தேதி கிராம சபை கூட்டம் : மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தகவல் :
திருவள்ளூர் அக் 25 : திருவள்ளூர் மாவட்ட அனைத்து ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு 01.11.2025 அன்று கிராம சபை கூட்டம் காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது. உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை ஒப்புதல் பெறுதல், ஊரகப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் – II, தூய்மை பாரத இயக்க (ஊரகம்) திட்டம் மற்றும் இதர பொருட்கள் தொடர்பாக கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
இவ்வாறு நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் அவ்வூராட்சியில் வசிக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து வாக்காளர்களும் கலந்து கொள்வது முக்கிய கடமையாகும். மேலும், கிராம சபைக் கூட்ட விவாதங்களில் பங்கேற்று, பயனாளிகள் தேர்வு மற்றும் அரசால் நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும்.எனவே மேற்படி கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் தவறாமல் பங்கேற்று சிறப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.

