விஜய்யை குற்றவாளியாக ஆக்குவதை ஏற்ற்குக்கொள்ள முடியாது..குரல் கொடுத்த அண்ணாமலை!
ராகுல் மணிப்பூர் செல்லும்போது பாஜக கரூர் வரக்கூடாதா? எங்கள் கொள்கை எதிரி திமுகதான். திமுகவை வீழ்த்துவதே பொது இலக்கு என அண்ணாமலை கூறினார்.
த.வெ.க. தலைவர் விஜய் கடந்த மாதம் 27-ந்தேதி கரூர் அருகே வேலுச்சாமிபுரத்தில் பிரசாரம் செய்தபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியானார்கள். இதுதொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், துணை பொதுச்செயலாளர் நிர்மல்குமார் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து கரூர் மாவட்டச்செயலாளர் உள்பட 2 பேரை கைது செய்தனர்.
இதற்கிடையே புஸ்சி ஆனந்த் உள்ளிட்ட 2 பேர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
அப்போது தலைமைப்பண்பு இல்லாதவர் விஜய் என்று விமர்சித்த நீதிபதி, த.வெ.க. நிர்வாகி ஆதவ் அர்ஜூனா வன்முறையை தூண்டும் வகையில் எக்ஸ் வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டது தொடர்பாக விசாரணை நடத்தவும் நீதிபதி உத்தரவிட்டார். ஐகோர்ட்டு உத்தரவு விஜய்க்கும், த.வெ.க.வுக்கும் பெரும் பின்னடைவாக அமைந்தது. இதனையடுத்து விஜய், வக்கீல் அணி நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.
ஐகோர்ட்டு தெரிவித்த கருத்துகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆலோசனையின் முடிவில், கட்சியின் நலன் கருதி சுப்ரீம் கோர்ட்டை அணுகுவது என முடிவு செய்யப்பட்டது.
இந்தநிலையில் சென்னையில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது;கரூர் சம்பவத்தில் விஜய்யை குற்றவாளியாக ஆக்குவதை ஏற்ற்குக்கொள்ள முடியாது. அரசியல் ஆசைக்காக வேண்டுமானால் விஜய்யை ஓரிரு நாள் கைது செய்து, பின்னர் விடுவிக்கலாம்.
தவெக, விஜய்க்கு அடைக்கலம் கொடுக்க, பாதுகாக்க வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை. தவெக நிர்வாகிகள் மீது தவறுகள் இருப்பது உண்மைதான். அதற்காக விஜய்யை குற்றவாளியாக ஆக்க முடியாது. தவெக நிர்வாகிகள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காத அரசு, அவர்களை பாஜகவினர் பாதுகாப்பதாக கூறுவதை ஏற்க முடியாது.
ராகுல் மணிப்பூர் செல்லும்போது பாஜக கரூர் வரக்கூடாதா? எங்கள் கொள்கை எதிரி திமுகதான். திமுகவை வீழ்த்துவதே பொது இலக்கு. இவ்வாறு அவர் பேசினார்.