இருந்த கிராம சபைக் கூட்டம்11 ம் தேதி நடைபெறும் : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தகவல்
காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு நடைபெற இருந்த கிராம சபைக் கூட்டம் நிர்வாக காரணங்களால் வரும் 11 ம் தேதி நடைபெறும் : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தகவல் :
திருவள்ளூர் அக் 02 : திருவள்ளூர் மாவட்டம், அனைத்து ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு 02.10.2025 அன்று நடைபெறவிருந்த கிராம சபைக் கூட்டம் நிர்வாக காரணங்களால் 11.10.2025 அன்று காலை 11 மணியளவில் நடைபெறவுள்ளது.
அக்கூட்டத்தில் கிராம மக்களின் 3 அத்தியாவசியமான தேவைகளை தேர்வு செய்து கிராம சபை ஒப்புதல் பெறுதல், சாதிப் பெயர்கள் கொண்ட குக்கிராமங்கள் சாலைகள் மற்றும் தெருக்கள் பெயரை மாற்றுதல் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, ஊரகப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், சபாசார் செயலி செயல்பாடுகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் – II, தூய்மை பாரத இயக்க (ஊரகம்) திட்டம், குழந்தை தொழிலாளர் மற்றும் கொத்தடிமை தொழிலாளர் அற்ற ஊராட்சியாக அறிவித்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ளுதல் தொடர்பாக விவாதித்தல், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் – தீன்தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் பயிற்சி திட்டம் மற்றும் இதர பொருட்கள் தொடர்பாக கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
இவ்வாறு நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் அவ்வூராட்சியில் வசிக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து வாக்காளர்களும் கலந்து கொள்வது முக்கிய கடமையாகும். மேலும், கிராம சபைக்கூட்ட விவாதங்களில் பங்கேற்று, பயனாளிகள் தேர்வு மற்றும் அரசால் நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். எனவே மேற்படி கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் தவறாமல் பங்கேற்று சிறப்பிக்குமாறு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.