இலவச பஸ் பாஸ் திட்டம் ..பயணிகளுக்கு குட் நியூஸ் சொன்ன அமைச்சர் !

Loading

வருகிற 30-ந் தேதி வரை செல்லத்தக்க கட்டணமில்லா பயண அட்டைகளை, அக்டோபர் 31-ந் தேதி வரை, மேலும் ஒரு மாத காலத்திற்கு நீட்டித்து அரசு போக்குவரத்துக் கழகப் பஸ்களில் பயணம் செய்யும் வகையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கட்டணமில்லா பஸ் பயண அட்டைகளை பயனாளிகள் இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து, பெற்றிட வழிவகை செய்யப்படும் என சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.அதன்படி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் வழங்கப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில், இத்திட்டத்தை செயல்படுத்தும் பொருட்டு, தமிழ்நாடு பயணியர் மற்றும் பொருள் போக்குவரத்துக்கழகம், தமிழ்நாடு மின் ஆளுமை முகமை நிறுவனத்துடன் இணைந்து, முதற்கட்டமாக மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் கடந்த 7-ந்தேதி முதல் அமல்படுத்தப்பட்டது.மாற்றுத்திறனாளிகள், கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள், அறிவுசார் திறன் குறைபாடு உள்ளவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், தமிழறிஞர்கள் மற்றும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உள்ளிட்ட பயனாளிகளுக்கு இணையதளம் வாயிலாக கட்டணமில்லா பயண அட்டைகளை பெறும் வசதி, அமல்படுத்தப்பட்டது.

மேலும் பயனாளிகள், இத்திட்டத்தின் வாயிலாக எவ்வித சிரமமுமின்றி தங்களது இருப்பிடத்திற்கு அருகாமையில் உள்ள அரசு இ-சேவை மையம் அல்லது https://www.tnesevai.tn.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து கட்டணமில்லா பஸ் பாஸ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

போதிய கால அவகாசம் தேவைப்படுகின்ற நிலையில் ஏற்கனவே பயனாளிகள் பயன்படுத்தி வரும் வருகிற 30-ந் தேதி வரை செல்லத்தக்க கட்டணமில்லா பயண அட்டைகளை, அக்டோபர் 31-ந் தேதி வரை, மேலும் ஒரு மாத காலத்திற்கு நீட்டித்து அரசு போக்குவரத்துக் கழகப் பஸ்களில் பயணம் செய்யும் வகையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

0Shares