மீண்டும் கருணை அடிப்படையிலான பணி, விதிமுறை திருத்தம் – யார் விண்ணப்பிக்கலாம்?
கருணை அடிப்படையில் பணி நியமனங்களுக்கான விண்ணப்பங்கள் இனி மாநிலம் முழுவதும் ஒற்றை முன்னுரிமைப் பட்டியலாகப் பராமரிக்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இனி விண்ணப்பங்கள் ஆன்லைன் போர்ட்டல் வழியாக மட்டுமே பெறப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
கடந்த 2021-ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்தபடி, ‘கருணை அடிப்படையில் பணி நியமனத்துக்கான தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் விதிகள், 2023’ உருவாக்கப்பட்டது. இந்த விதிகளைத் திருத்துமாறு சென்னை ஐகோர்ட்டு, அரசுக்கு உத்தரவிட்டதையடுத்து காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும் என்றும், மாநில அளவிலான ஒற்றை முன்னுரிமைப் பட்டியலை பராமரிப்பது குறித்துப் பரிந்துரைக்க ஒரு குழுவை அமைக்கவும் நீதிமன்றம் அறிவுறுத்தியது.
ஆனால் நீதிமன்ற உத்தரவுகளைப் பின்பற்றாததால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றும் தொடரப்பட்டதைத் தொடர்ந்து, தலைமைச் செயலாளர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு, நீதிமன்றத்தின் உத்தரவுகளைப் பின்பற்றி விதிகளில் திருத்தங்கள் செய்ய முடிவு செய்தது. அதன் அடிப்படையில், தற்போது புதிய திருத்தங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
கருணை அடிப்படையில் பணி நியமனங்களுக்கான விண்ணப்பங்கள் இனி மாநிலம் முழுவதும் ஒற்றை முன்னுரிமைப் பட்டியலாகப் பராமரிக்கப்படும்.இனி விண்ணப்பங்கள் ஆன்லைன் போர்ட்டல் வழியாக மட்டுமே பெறப்படும். துறையின் இணையதளம் அல்லது நேரடி அலுவலகங்களில் கொடுக்கப்படும் விண்ணப்பங்கள் நீக்கப்படுகின்றன.
கருணை அடிப்படையில் பணி நியமனங்கள் ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்கப்படும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசுப் பணியில் இருந்த ஒருவர் எதிர்பாராத விதமாக இறந்தால், அவரது குடும்பத்தின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க, இறந்த அரசு ஊழியரின் குடும்பத்தில் தகுதியான ஒருவருக்கு அரசுப் பணி வழங்கப்படுகிறது.
இறந்த அரசு ஊழியரின் மனைவி அல்லது கணவர், மகன், மகள், தத்து மகன் அல்லது தத்து மகள்.
திருமணம் ஆகாத அரசு ஊழியர் இறந்தால், அவரது குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன், தம்பி போன்றோருக்கும் பணி வாய்ப்பு கிடைக்கும்.
விண்ணப்பதாரரின் கல்வித் தகுதியின் அடிப்படையில், பெரும்பாலும் குரூப் ‘C’ அல்லது குரூப் ‘D’ பிரிவுகளில் உள்ள பணியிடங்கள் வழங்கப்படும். இறந்த ஊழியர் வகித்த அதே பதவியைப் பெற வாய்ப்பில்லை.
குடும்பத்தில் வேறு யாரும் அரசுப் பணியில் இருக்கக்கூடாது என்பது ஒரு முக்கியமான நிபந்தனை.
காலிப் பணியிடங்களின் அடிப்படையில், விண்ணப்பதாரர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்குள் பணி நியமனம் வழங்கப்படும் வகையில் விதிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
ஏற்கெனவே நிலுவையில் உள்ள விண்ணப்பங்களும் இந்தப் புதிய மாநில அளவிலான பதிவு மூப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டு, அதற்கேற்பப் பணி வழங்கப்படும்.
அரசு ஊழியர் இறந்த தேதியிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும்.
விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 18 ஆக இருக்க வேண்டும்.பொதுவாக, கணவன்/மனைவிக்கு 50 வயது வரையிலும், மகன்/மகள்/சகோதரருக்கு 40 வயது வரையிலும் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.