காதலியை தோட்டத்தில் கொன்று புதைத்த காதலன்..எதற்காக தெரியுமா?
திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியதால் காதலியை தோட்டத்தில் கொன்று புதைத்த காதலன் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,
கர்நாடகா மாநிலம் கதக் மாவட்டம் நாராயணபுரா பகுதியை சேர்ந்தவர் பெட்ரோல் பங்க் ஊழியர் சதீஷ். 27 வயதான இவர் அதே கிராமத்தை சேர்ந்த 25 வயதான மதுஸ்ரீ என்ற பெண்ணை கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்கு மதுஸ்ரீயின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்க அப்பெண்ணை உறவினர் வீட்டுக்கு பெற்றோர் அனுப்பி வைத்தனர்.
இந்தநிலையில், கடந்த 2024ஆண்டு டிசம்பர் மாதம் 16-ந் தேதி மதுஸ்ரீ உறவினர் வீட்டில் இருந்து மாயமானதால் பெற்றோர் பெட்டகேரி போலீசில் புகார் அளித்தன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது காதலன் சதீஷ் மீது சந்தேகம் இருப்பதாக பெண்ணின் உறவினர்கள் கூறியதையடுத்து அவரை அழைத்து விசாரித்தபோது, போலீசாருக்கு சதீஷ் மீது சந்தேகம் எழுந்தது.
இந்தநிலையில், 6 மாதம் கழித்து கடந்த 13-ந் தேதி சதீஷ், மதுஸ்ரீயை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்ற கண்காணிப்பு கேமரா காட்சிகள் கிடைத்தது. அதை வைத்து சதீசிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.அப்போது அவர் மதுஸ்ரீயை கொலை செய்ததை ஒப்பு கொண்டார்.
சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் மதுஸ்ரீயை அழைத்து சென்ற அவர் தனது தோட்டத்தில் தங்க வைத்தார். இதையடுத்து மதுஸ்ரீ, சதீசிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினார். இதனால் கோபம் அடைந்த சதீஷ், துப்பட்டாவால் மதுஸ்ரீயின் கழுத்தை நெரித்து கொலை செய்து உடலை தோட்டத்தில் குழி தோண்டி புதைத்துள்ளார்.தற்போது அவர் கொடுத்த தகவலின் பேரில் மதுஸ்ரீயின் எலும்பு கூடுகளை கைப்பற்றியுள்ள போலீசார் அதை மரபணு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் கைதான சதீசிடம் இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.