திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்றுவரும் வளர்ச்சி திட்ட பணிகள்..கண்காணிப்பு அலுவலர் ஆய்வு!
திருவள்ளூர் மாவட்டத்தில் அனைத்து துறைகளில் செயல்படுத்தி வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கே.பி. கார்த்திகேயன் ஆய்வு செய்தார்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து துறைகளில் செயல்படுத்தி வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் தலைமை தாங்கினார்.
இக்கூட்டத்தில் வருகின்ற பருவமழை காலத்தில் டெங்கு போன்ற தடுப்பு நடவடிக்கைகளில் சுகாதாரத்துறையினர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் இணைந்து செயல்பட வேண்டும், மேலும், மழைநீர் வடிகால் கால்வாய்களை தூர்வாரிட வேண்டும், பருவமழை காலங்களில் ஏற்படும் வெள்ள பாதிப்புகளை கட்டுபடுத்த தயார் நிலையில் இருக்க வேண்டும் என அலுவலர்களுக்கு தமிழ்நாடு மின்னணுவியல் கழக நிர்வாக இயக்குநர் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் டாக்டர்.கே.பி.கார்த்திகேயன் அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அனைத்து துறைகளில் செயல்படுத்தி வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் தலைமையில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கே.பி. கார்த்திகேயன் ஆய்வு மேற்கொண்டார்
அதன்படி திருவேற்காடு நகராட்சி பகுதிகளில் உள்ள திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மக்கும் குப்பை, மக்காத குப்பை கொண்டு இயற்கை நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் கூடத்தின் செயல்பாடுகள் குறித்தும், நசரத்பேட்டை ஊராட்சியில் ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் நபார்டு 2024- 25 திட்டத்தில் ரூ.34.20 இலட்சம் மதிப்பீட்டில் 2 வகுப்பறை கட்டடங்கள் கட்டப்பட்டு வரும் பணிகளையும், அதே ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளின் உயரம் , எடை அவர்களுக்கு வழங்கப்படும் உணவுகள், வருகை பதிவேடு ஆகியவைகள் குறித்தும், வெள்ளவேடு ஊராட்சியில் மகளிர் சுய உதவிக் குழுக்களால் தயாரிக்கப்படும் பேக்கரி அலகில் பார்வையிட்டு அதன் பயன்பாடுகள் குறித்து கேட்டறிந்து நீங்கள் தயாரிக்கப்படும் பொருட்களை பேக்கிங் செய்து வெளிச்சந்தைகளில் விற்பனை செய்யும் பொழுது அதிக லாபம் கிடைக்கும் என்றார்.
குத்தம்பாக்கம் ஊராட்சியில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் தையல் அலகில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகள் குறித்தும், திருவள்ளுர் நகராட்சி பாக்கம் – திருப்பதி வரை – 205 தேசிய நெடுஞ்சாலைக்கான நடைபெற்று வரும் திட்டப் பணிகளையும், திருவள்ளுர் நகராட்சி உட்கட்டமைப்பு திட்டத்தில் ரூ.32 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையத்திற்கான நடைபெற்று வரும் உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து தமிழ்நாடு மின்னணுவியல் கழக நிர்வாக இயக்குநரும் மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான கே.பி. கார்த்திகேயன் ஆய்வு மேற்கொண்டார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இராஜ்குமார், திட்ட இயக்குநர்கள் வை. ஜெயக்குமார் ( ஊரக வளர்ச்சி முகமை) , செல்வராணி (மகளிர் திட்டம்), வருவாய் கோட்டாட்சியர்கள் ரவிச்சந்திரன் (திருவள்ளூர்), கனிமொழி (திருத்தணி) , மற்றும் பல்வேறு துறை சார்ந்த உயர் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.