1014 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.131.80 கோடி கடனுதவி..மாவட்ட ஆட்சியர் வழங்கினார்!
பட்டரைபெரும்புதூரில் மகளிர் சுய உதவிக் குழு தினத்தை முன்னிட்டு 1014 மகளிர் சுய உதவிக் குழுக்கள் கொண்ட 2028 பயனாளிகளுக்கு ரூ.131.80 கோடி மதிப்பீட்டில் வங்கி கடனுதவிகளை மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் வழங்கினார்.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மகளிர் சுய உதவிக் குழு தினத்தை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற அரசு விழாவில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கியதைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டம், பட்டரைபெரும்புதூர் சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் மகளிர் சுய உதவிக் குழு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற அரசு விழாவில் மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் கலந்து கொண்டு 1014 மகளிர் சுய உதவிக் குழுக்கள் கொண்ட 2028 பயனாளிகளுக்கு ரூ.131.80 கோடி மதிப்பீட்டில் வங்கி கடனுதவியினை வழங்கி பேசினார்.
தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம், சுய உதவிக் குழு இயக்கத்தை மாநிலம் முழுவதும் பரவலாக்கி கல்வி, வேலைவாய்ப்பு, சமூக மேம்பாடு பொருளாதார மேம்பாடு மற்றும் சுய சார்புத்தன்மை மூலம் பெண்களின் நிலையை மேம்பாடு அடையச் செய்யும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் ஆகிய மூன்று முக்கிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில் 19439 மகளிர் சுய உதவிக் குழுக்கள் உள்ளன. இதில் மொத்தம் 252707 உறுப்பினர்கள் உள்ளனர், இதில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் 14272 குழுக்களும் இதில் 185536 உறுப்பினர்கள் உள்ளனர். நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தில் 5167 குழுக்களும் இதில் 67171 உறுப்பினர்கள் உள்ளனர். 2025-2026 ஆம் ஆண்டில் சுய உதவிக் குழுக் கடனாக இதுவரை ரூ.247.87 கோடி வழங்கப்பட்டுள்ளது. இன்று 1014 சுய உதவிக் குழுக்கள் கொண்ட 2028 பயனாளிகளுக்கு ரூ.131.80 கோடி வங்கிக் கடன் வழங்கப்பட்டுள்ளது. இதனை மூலதனமாக கொண்டு பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையை அடைந்து சமுதாயத்தில் உயர்ந்து நிற்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் தெரிவித்துள்ளார்.
இதில் திட்ட இயக்குநர் மகளிர் திட்டம் செல்வராணி, அம்பேத்கர் சட்டக் கல்லூரி முதல்வர் கயல்விழி, உதவி திட்ட அலுவலர்கள் அமல்ராஜ், சரவணன், சீனிவாசன்,பெரியநாயகம் கார்த்திகேயன் சந்திரசேகர் மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர் வட்டார இயக்க மேலாளர்கள், சுய உதவி குழு உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.