7-வது நாளாக குற்றாலத்தில் குளிக்க தடை!
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்துவரும் மழை காரணமாக பாதுகாப்பு கருதி குற்றாலம் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க 7-வது நாளாக இன்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் தென் மேற்கு பருவமழை தொடங்கியது முதல் தமிழகத்திலும் மழை தீவிரமாக பெய்து வருகிறது. தமிழகத்திலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள மாவட்டங்களில் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான முதல் அதிக மழை பெய்து வருகிறது.இதன் காரணமாக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் சாரல் மழை தொடர்ந்து பெய்து வருவதனால் அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து, நீர்மட்டமும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்துவரும் மழை காரணமாக குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு நீடித்து வருகிறது.மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கடந்த 6 நாட்களாக குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.இந்த நிலையில் , பாதுகாப்பு கருதி அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க 7-வது நாளாக இன்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது.