மழையால் முளைக்க தொடங்கிய நெல்மணிகள்…விவசாயிகள் வேதனை!
திருவள்ளூர் அருகே நேரடி கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் அறுவடை செய்து சாலையில் கொட்டி பாதுகாக்கப்பட்ட நெல்மணிகள் மழையால் முளைக்க தொடங்கி இருப்பதால் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட பன்னூரில் நேரடி கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டது. ஆனால் திமுக அரசின் அலட்சியத்தால் அது திறக்கப்படாமல் உள்ளது. இந்நிலையில் பன்னூர், திருப்பந்தியூர், திருமணிக்குப்பம், வாசனாம்பட்டு ஆகிய ஊர்களில் சுமார் 2 ஆயிரம் ஏக்கரில் நவரை பருவம் ஒரு போகம் நெற்பயிர் விவசாயத்தை 250-க்கும் மேற்பட்ட விவசாயிகள் செய்து வருகின்றனர்,
கடந்த ஒரு மாதம் முன்பாக அறுவடை செய்த நெல்மணிகளை பன்னூரில் அமைக்கப்பட்ட நேரடி கொள்முதல் நிலையம் திறக்கப்படாமல் இருப்பதால் அதனால் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை பாதுகாக்க நெற்களம் இல்லாததால் விவசாயிகள் வெட்ட வெளியிலும் சென்னை -பெங்களூர் அதிவிரைவு சாலை வழித்தடமான சுங்குவார்சத்திரம் வெளிவட்டச் சாலையிலும் கடந்த ஒரு மாதமாக அந்த நெல்மணிகளை விவசாயிகள் சாலையில் கொட்டி உலர்த்தி காயவைத்து பாதுகாத்து வந்திருந்தனர்.
இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக பெய்த மழையின் காரணமாக சுமார் 100 மூட்டைகள் அளவு கொண்ட நெல் குவியல்கள் மழையில் நனைந்து முளைக்க தொடங்கியது. அரசின் அலட்சியத்தால் அமைக்கப்பட்ட நேரடி கொள்முதல் நிலையத்தை திறக்காததால் நெல்மணிகள் நாசமானதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
வட்டிக்கு கடன் வாங்கியும் நகைகள் அடகு வைத்தும் ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் செலவு செய்து அறுவடை செய்த நிலையில் நேரடி கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் நெல்மணிகள் முளைக்க தொடங்கி இருப்பதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.மேலும் மழை தொடங்க இருப்பதால் உடனடியாக பன்னூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை விரைந்து திறந்து கொள்முதல் செய்ய வேண்டுமென விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.