கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு..தமிழக சுகாதாரத்துறைகள் தீவிர கண்காணிப்பு!
கேரளாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் அதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை தீவிரமாக கண்காணித்து வருகிறது.
கடந்த 2019-ம் ஆண்டு உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால் லட்சக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர். 2022-ம் ஆண்டுக்கு பிறகு படிப்படியாக உலகம் சகஜ நிலைக்கு திரும்பியது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா தொற்று அவ்வப்போது தலைகாட்டி வருகிறது. அந்த வகையில், கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 2 நாட்களில் கேரள மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 182 ஆக உயர்ந்துள்ளது.
சமீபத்தில் மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில் தமிழகத்தில் 66 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்திருந்தது. மேலும் கேரளாவில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக சுகாதாரத்துறை தீவிரப்படுத்தி உள்ளது.
இதுகுறித்து, சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-கேரளாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் அதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை தீவிரமாக கண்காணித்து வருகிறது. கொரோனாவில் என்னென்ன வகை பாதிப்புகள் கேரளாவில் வந்துள்ளது என்றும் ஆய்வு செய்து வருகிறோம். தமிழகத்தில் முககவசம் கட்டாயம் இல்லை. காய்ச்சல், இருமல், உடல்நிலை பாதிப்பு உடையவர்கள் வெளியில் செல்லும்போது முககவசம் அணிந்துகொள்ள வேண்டும். இது வழக்கமாக கடைபிடிக்க வேண்டிய நடைமுறைதான்.இவ்வாறு அவர் கூறினார்.