நடிகை தமன்னாவை நியமனம் செய்தது ஏன்? கர்நாடக அரசு விளக்கம்!
சமூக வலைதளங்களில் 2.8 கோடி பின்தொடர்பாளர்களை கொண்டுள்ள நடிகை தமன்னாவை நாங்கள் மைசூரு சாண்டல் சோப்பு விளம்பர தூதராக நியமித்துள்ளோம் என்று கர்நாடக அரசு விளக்கம் அளித்துள்ளது.
கர்நாடக மைசூரு சாண்டல் சோப்பு வியாபாரத்தை அதிகரிக்கும் நோக்கத்தில் அந்த நிறுவனம், பிரபல நடிகை தமன்னாவை விளம்பர தூதராக நியமித்துள்ளது.இதற்கு கன்னட அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கன்னடர்கள் கர்நாடக அரசின் முடிவுக்கு எதிராக கருத்துகளை கூறி வருகிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் விளம்பர தூதராக பணிக்கு கர்நாடகத்தை சேர்ந்த ஒரு நடிகையை தேர்ந்தெடுத்து இருக்க வேண்டும் என்று பல்வேறு கன்னட அமைப்புகள் கூறிவருகின்றன . 2 ஆண்டுகளுக்கு நடிகை தமன்னாவுக்கு ரூ.6.20 கோடி சம்பளம் வழங்க மைசூரு சாண்டல் சோப்பு நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது .
இந்தநிலையில் இதுபற்றி கர்நாடக அரசு விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக தொழில்துறை மந்திரி எம்.பி.பட்டீல் பெங்களூருவில் கூறியதாவது:-மைசூரு சாண்டல் நிறுவனத்தின் வணிகத்தை அடுத்த 3 ஆண்டுகளில் ரூ.5 ஆயிரம் கோடியாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். நாங்கள் கன்னடரான நடிகை தீபிகா படுகோனே, ராஷ்மிகா மந்தனா நடிகைகள் ஸ்ரீலீலா, பூஜா ஹெக்டே, கியாரா அத்வானி ஆகியோரிடமும் பேசினோம்.
மற்ற நடிகைகள் பிற நிறுவனங்களின் தயாரிப்புகளில் விளம்பர தூதர்களாக பணியாற்றி வருகிறார்கள். அதனால் சமூக வலைதளங்களில் 2.8 கோடி பின்தொடர்பாளர்களை கொண்டுள்ள நடிகை தமன்னாவை நாங்கள் விளம்பர தூதராக நியமித்துள்ளோம்”‘ என்றார்.