மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்கும் பணி தொடக்கம்!

Loading

தற்போது மீன்பிடி தடைகாலம் என்பதால் தொழிலின்றி வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் மீனவ குடும்பங்களுக்கு இன்று நிவாரணத் தொகை வழங்கும் பணியை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கிவைத்தார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-கடல் மீன்வளத்தைப் பேணிக்காத்திட, தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15-ம் தேதி முதல் ஜூன் 14-ம் தேதி வரையிலும், ஜூன் 1-ம் தேதி முதல் ஜூலை 31-ம் தேதி வரையிலும் 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் மீன்பிடி தடைக்காலத்தின்போது மீன்பிடிப்பு செய்யும் பணியாளர்கள் மற்றும் முழுநேர மீன்பிடிப்பினை சார்ந்து வாழும் மீனவ குடும்பங்களுக்கு தொழிலின்றி வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படுவதால், மீன்பிடி தடைகால நிவாரணத் தொகை வழங்கப்படுகிறது. நடப்பாண்டின் மீன்பிடி தடைக்காலத்தில் தமிழ்நாட்டின் 14 கடலோர மாவட்டங்களில் உள்ள 1.75 லட்சம் கடல் மீனவக் குடும்பங்களுக்கு, மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகையாக ரூ.8,000 வீதம் வழங்கிடும் பொருட்டு, அரசு ரூ.140.07 கோடி நிதி ஒப்பளிப்பு வழங்கியுள்ளது.

இந்தநிலையில் இன்று சென்னை, நந்தனத்தில் உள்ள மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மீன்வளம் மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலா 10 மீனவ பயனாளிகளுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகையினை அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைத்திடும் வகையிலான ஆணைகளை வழங்கினார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0Shares