30 நாட்களில் ஐஎஸ்ஐ தரச்சான்று-பிஐஎஸ் சென்னை இயக்குநர் பவானி தெரிவித்துள்ளார்

Loading

30 நாட்களில் ஐஎஸ்ஐ தரச்சான்று பெறும் வகையில் நடைமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளன: பிஐஎஸ் சென்னை இயக்குநர் பவானி

 PIB Chennaiஇயக்குநர் திருமதி பவானி

இந்திய தர நிர்ணய அமைவனம் (பிஐஎஸ்) நாட்டில் நுகர்வோரின் உரிமைகளை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிப்பதாக பிஐஎஸ் சென்னை அலுவலக இயக்குநர் திருமதி பவானி தெரிவித்துள்ளார்.

உலக நுகர்வோர் விழிப்புணர்வு நாள் தொடர்பாக இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாட்டில் நுகர்வோரின் பாதுகாப்பு அதிகரித்துள்ளதாகவும் விழிப்புணர்வை பிஐஎஸ் நிறுவனம் ஏற்படுத்தி வருவதாகவும் மக்கள் பயன்படுத்தும் அன்றாட பொருட்களில் இருந்து விலை உயர்ந்த ஆபரணங்கள் வரை அனைத்து பொருட்களின் தரத்தையும் பிஐஎஸ்-ன் ஐஎஸ்ஐ, ஹால்மார்க், சிஆர்எஸ் போன்ற தர முத்திரைகள் உறுதி செய்வதாகவும் தெரிவித்தார்.

பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கல்லூரிகளிலும் பொது இடங்களிலும் பிஐஎஸ் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது என்றும் அவர் கூறினார்.

மானக் மந்தன் எனும் கலந்துரையாடல் நிகழ்ச்சி கல்லூரிகளிலும் பிஐஎஸ் கனெக்ட் என்னும் நிகழ்ச்சி நுகர்வோர் மற்றும் உற்பத்தியாளர்களை இணைத்தும் நடத்தப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

பொதுமக்கள் தங்கள் பயன்படுத்தும் அனைத்து பொருட்களின் தரத்தையும்  காலாவதியாகும் காலத்தையும் பிஐஎஸ் செயலியில் தெரிந்துகொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

22,600-க்கும் அதிகமான தர நிலைகள் இந்தியாவில் உள்ளதாகவும் இவற்றில் 769 பொருட்களுக்கான தரச் சான்று பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

குழந்தைகளுக்கான பொம்மைகள் ஐஎஸ்ஐ தரச் சான்று பெறுவது 2021 ஜனவரி ஒன்றாம் தேதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் தங்க நகைகளுக்கான ஆறு இலக்க ஹால்மார்க் தனிப்பட்ட  குறியீட்டு எண் பெறுவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

அண்மையில் இணைய வர்த்தக நிறுவனங்களான அமேசான், ஃபிலிப்கார்ட் ஆகியவற்றின் கிடங்குகளில் சோதனை நடத்தி தரச்சான்று பெறாத 3376 பொருட்களை கைப்பற்றியதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த 2022-23 -ம் ஆண்டில் 24 சோதனைகளையும், 2023-24-ல் 13 சோதனைகளையும் இந்த ஆண்டு (2024-25-ல்) இதுவரை 9 சோதனைகளையும் நடத்தி தரமில்லா பொருட்களை கைபற்றியுள்ளதோடு அந்நிறுவனங்கள் மீது நடவடிக்கையும் எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும் ஐஎஸ்ஐ தரச் சான்று பெறுவது மிகவும் எளிய நடைமுறையில் செயல்படுத்தப்படுவதாகும் 30 நாட்களுக்குள் விரைவாகவும் அதிகபட்சம் 90 நாட்களுக்குள்ளும் தரச்சான்று பெறமுடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

அண்மையில் தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறையின் நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டத்தில் பள்ளிகளுக்கு ஐஎஸ்ஓ 9001:2015 சான்றளிக்கப்பட்டதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் பிஐஎஸ் சென்னை அலுவலக இணை இயக்குநர் திரு கௌதம், மேலாண்மை அமைப்பின் இயக்குநர் திரு வெங்கட் நாராயணன், பத்திரிகை தகவல் அலுவலக துணை இயக்குனர் ஜே விஜயலட்சுமி ஆகியோர் உடன் இருந்தனர்.

0Shares