பாதுகாப்பான இயக்கத்தை உறுதி செய்வதில் சிஐஎஸ்எப் முக்கிய பங்கு வகிக்கிறது..அமித்ஷா பெருமிதம்!
மத்திய அரசு தமிழுக்கு எப்போதும் முக்கியத்துவம் அளித்து வருகிறது என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறினார் .
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த தக்கோலம் ராஜாதித்யன் சோழன் மத்திய தொழிற் பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில், தொழிற் பாதுகாப்பு படை உதய தின விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்துகொண்டார்.
அப்போது உதய தின விழாவில் வீரர்கள் அணிவகுப்பை பார்வையிட்டு, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா. மேலும், போதைப்பொருள், ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கடத்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், கடலோர பகுதிகளில் தேசிய பாதுகாப்பை பலப்படுத்தவும் ‘பாதுகாப்பான கடற்கரைகள், வளமான இந்தியா’ எனும் சைக்கிள் பேரணி மத்திய மந்திரி அமித்ஷா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அதன்பின்னர் நிகழ்ச்சியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பேசியதாவது:-தமிழர்களின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் இந்தியாவின் பாரம்பரியம், கலாச்சாரத்தை வலுப்படுத்துகிறது என்றும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தமிழுக்கு எப்போதும் முக்கியத்துவம் அளித்து வருகிறது என கூறினார் . மேலும் ஒவ்வொரு மாநில மொழிக்கும் மத்திய அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது என்றும் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளை தமிழ் வழியில் கற்பிக்க மத்திய அரசு ஊக்கப்படுத்தி வருகிறது என பேசினார்.
மேலும் மத்திய அரசு நடத்தும் மத்திய ஆயுதக் காவல் படை தேர்வுகளில் தமிழுக்கு இதுவரை இடம் இல்லாமல் இருந்தது. தற்போது இத்தேர்வை பெங்காலி, கன்னடம், தமிழ் மற்றும் பிற தாய்மொழிகளில் எழுத பிரதமர் மோடி வழிவகை செய்துள்ளார் என்றும் நாட்டில் சீரான போக்குவரத்து, பாதுகாப்பான இயக்கத்தை உறுதி செய்வதில் சிஐஎஸ்எப் முக்கிய பங்கு வகிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
அமித்ஷா வருகையையொட்டி ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். வேலூர் சரக டி.ஐ.ஜி. தேவராணி, ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்த சுக்லா, அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜாபர் சித்திக் ஆகியோர் பாதுகாப்பு பணிகளை கண்காணித்து வந்தனர்.