கந்துவட்டி கேட்டு மிரட்டல்..4 வாலிபர்களை கொத்தாக தூக்கிய காவல்துறை!
உரிய அனுமதியின்றி நிதி நிறுவனங்களை நடத்தி,கந்துவட்டி கேட்டு மிரட்டல் விடுத்த 4 வாலிபர்களை நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே போலீசார் கைது செய்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள கட்ட பொம்மன் தெருவை சேர்ந்தவர் சுரேஷ்,27 வயதான இவர்,நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், சிவந்திபுரம்வி.கே.புரம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.
அவருடன் சேர்ந்து அம்பை ஊர்காடு பகுதியை சேர்ந்த 30 வயதான அசோக்ராஜா , வி.கே.புரம் கம்பலத்தார் தெருவை சேர்ந்த 21 வயதான செல்வகுமார் , கல்லிடைக்குறிச்சி சுப்பிரமணியபுரம் யாதவர் தெருவை சேர்ந்த சங்கர்ராஜா ஆகிய 3 பேர் நிதி நிறுவனம் நடத்தி கந்து வட்டி வசூலிப்பதாகவும், நிதி நிறுவனத்திற்கு உரிய அனுமதியை அவர்கள் பெறவில்லை எனவும் அடிக்கடி புகார்கள் எழுந்தது.
இந்நிலையில் வி.கே.புரம் கட்டப்புளி தெருவை சேர்ந்தவர் சுரேஷ் என்ற கூலி தொழிலாளியின் மனைவி ரேவதி என்பவர் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெறுவதற்காக நிதி நிறுவனம் நடத்தி வரும் சுரேசிடம் கடன் பெற்றுள்ளார்.அப்போது அவர் கடன் தொகையை செலுத்த தாமதமானதால், கடன் கொடுத்த நிதி நிறுவனத்தினர் அவர் வீட்டின் வாசலில் அமர்ந்து கொண்டு அவதூறாக பேசி மிரட்டியதாக சொல்லப்படுகிறது.
இதையடுத்து இதனால் மன வேதனை அடைந்த ரேவதி வி.கே.புரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் உரிய அனுமதியின்றி நிதி நிறுவனங்களை நடத்தியதாக கூறி சுரேஷ் உட்பட 4 பேரை கைது செய்தனர்.