ஆலோசனைகளை வழங்குங்கள்.. வேளாண் துறையினருக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்!

Loading

பட்ஜெட்டை அமல்படுத்த ஆலோசனைகளை வழங்குங்கள் என வேளாண் துறையினரிடம் வேண்டுகோளாக கேட்டு கொண்டதுடன், இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டை அடிமட்ட அளவில் விரைவாக அமல்படுத்தும்படியும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

பிரதமர் மோடி பட்ஜெட்டுக்கு பின்னான கருத்தரங்கில் காணொலி காட்சி வழியே கலந்து கொண்டு பேசினார்.அப்போது அவர் பேசும்போது, 3-வது முறையாக பொறுப்பேற்ற பின்னர், பா.ஜ.க. அரசு சார்பில் முழு அளவிலான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது என்றும் இந்த பட்ஜெட்டுக்கு முன்பு, அதனை உருவாக்குவதற்காக அனைத்து துறையை சேர்ந்தவர்களிடம் இருந்தும் தரவுகள் மற்றும் ஆலோசனைகள் பெறப்பட்டு பட்ஜெட்டானது ஒரு வடிவத்திற்கு கொண்டு வரப்பட்டது என கூறினார்.

மேலும் இந்த பட்ஜெட்டை தற்போது திறம்பட அமல்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்றும் வளர்ச்சிக்கு முதல் இயந்திரம் என்று வேளாண்மை கருதப்படுகிறது என்றும் இந்த அரசானது, வேளாண் வளர்ச்சி மற்றும் கிராமப்புற வளம் ஆகியவற்றை இலக்காக கொண்டு இயங்கி வருகிறது என அவர் கூறினார்.

மேலும் அவர் தொடர்ந்துபேசும்போது , நாடு இறக்குமதியை சார்ந்திருக்கும் நிலையை குறைக்க, தானிய உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய தேவையையும் சுட்டி காட்டி பேசினார். அதனால், அதிக விளைச்சலை தரும் பயிர்களின் விதைகளில் கவனம் செலுத்தும்படி அவர் தனியார் துறையினரை கேட்டு கொண்டார்.

மேலும் நடைமுறையில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை இன்னும் திறம்பட செயல்படுத்துவதற்கான விவாதங்களை நடத்தும்படியும் அவர் வலியுறுத்தி உள்ளார்.மேலும் இந்த கருத்தரங்கானது, புதிய பட்ஜெட்டை உருவாக்குவதில் கவனம் செலுத்த கூடாது என்றும் பட்ஜெட் உருவாக்கப்பட்டு விட்டது என்றும் அதனால், நம்முடைய முழு கவனமும் செயலில் இருக்க வேண்டும் என்றார். மேலும் பட்ஜெட்டை நடைமுறைப்படுத்தும்போது ஏற்பட கூடிய தடைகள் மற்றும் குறைபாடுகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அப்போது அவர் கேட்டு கொண்டார்.

0Shares