கொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் சுட்ட மூதாட்டி..விஷேச நிகழ்வை காண திரண்ட மக்கள்!
மகா சிவராத்திரியை முன்னிட்டு 48 நாட்கள் விரதம் இருந்த முத்தம்மாள், அம்மனுக்கு சாற்றிய புடவையை அணிந்து, கொதிக்கும் நெய்யில் கையை விட்டு அப்பம் செய்தார்.
நாடு முழுவதும் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.அதன் ஒருபகுதியாக மகா சிவராத்திரியையொட்டி நேற்று இரவு முதல் தமிழகம் முழுவதும் சிவன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதனால் அனைத்து சிவாலயங்களிலும் ஏராளமான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர்.
மேலும் சிவராத்திரியை முன்னிட்டு சிவன் கோவில்களில் முதல் ஜாமம் பூஜை ,இரண்டாம் ஜாமம் பூஜை மூன்றாம் ஜாமம் பூஜை ,நான்காம் ஜாமம் பூஜை என பூஜைகள் நடைபெற்றன.அப்போது விடிய விடிய கண் விழித்த பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
அதன் ஒரு பகுதியாக ஸ்ரீவில்லிபுத்தூர் முதலியார்பட்டி தெருவில் உள்ள பத்ரகாளியம்மன் கோவிலில் மகா சிவராத்திரி அன்று கைகளால் கொதிக்கும் நெய்யில் அப்பம் செய்து சுவாமிக்கு படைக்கும் விஷேச நிகழ்வு நடைபெற்றது.நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் இந்த விசேஷ நிகழ்வில் இரவு 12 மணிக்கு ஊரணிபட்டியை சேர்ந்த 90 வயது மூதாட்டி முத்தம்மாள் கொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் சுட்டார். இந்த மூதாட்டி மூதாட்டி தொடர்ந்து 63-வது ஆண்டாக கொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் சுட்டு வருகிறார். அப்போது நெய்யால் பக்தர்களுக்கு நெற்றியில் திலகமிட்டு மூதாட்டி ஆசி வழங்கினார்.
மகா சிவராத்திரியை முன்னிட்டு 48 நாட்கள் விரதம் இருந்த முத்தம்மாள், அம்மனுக்கு சாற்றிய புடவையை அணிந்து, கொதிக்கும் நெய்யில் கையை விட்டு அப்பம் செய்தார். அப்போது அந்த அப்பம் அம்மனுக்கு படைக்கப்பட்டு பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. மேலும் இந்த விழாவில் ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.